2023 ஐபிஎல் ஏலத்தில் இவரே “ஹீரோ”.. பிரிட்டன் இளவரசி டூ ஜேம்ஸ் பாண்ட்! யார் இந்த ஹியூக் எட்
கொச்சி: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் இன்று மதியம் தொடங்க இருக்கும் மினி ஏலத்தில் இறுதி முடிவை எடுக்கப்போகும் ஹியூக் எட்மீடஸ்தான் ஹீரோவாக இருக்கப்போகிறார். யார் அவர்? விரிவாக பார்ப்போம்.
உலகளவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் லீக் தொடர்களில் அதிக வருமானம் தரக்கூடிய மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடராக திகழ்ந்து வருகிறது ஐ.பி.எல்.
இந்த தொடருக்கான மினி ஏலம் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தை ஹியூக் எட்மீடஸ் நடத்த உள்ளார்.
டெல்லிக்குள் நுழையும் ராகுல் யாத்திரை.. காத்திருக்கும் கமல்ஹாசன்.. குஷியில் காங். பீதியில் பாஜக!
யார் இந்த எட்மீடஸ்?
ஐபிஎல் ஏலத்தின்போது அதை முறையாகவும், நடுநிலையாகவும், சுவாரஸ்யமாகவும் கொண்டு செல்லும் மிக முக்கிய பொறுப்பு ஏலத்தை நடத்துபவர்களின் கையில்தான் உள்ளது. அந்த வகையில் இன்றைய ஏலத்தை நடத்த இருப்பவர்தான் ஹியூக் எட்மீடஸ். கடந்த 2017 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் ஏலத்தை நடத்தி வந்த ரிச்சர்ட் மேட்லிக்கு மாற்றாக 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தை நடத்த வந்தவர்தான் ஹியூக் எட்மீடஸ்.
சுவாரஸ்யமான ஏலக்காரர்
ஐபிஎல் ஏலத்தில் ஏலத்தின்போது இவர் வீரர்களை அறிவிக்கும் விதம், ஏலத்தொகையை சொல்லும் முறை, ஏலத்தில் எடுத்தவுடன் அடிக்கும் கமெண்ட் என அனைத்தும் ரசிகர்களை கவரும். இவர் ஏலத்தை நடத்தும் விதத்தை பார்ப்பதற்காகவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதைபோல் இந்த ஏலத்தை கண்டு ரசிக்கும் மக்கள் ஏராளம்.
35 ஆண்டு அனுபவம்
ஏலம் விடுவதில் 35 ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர் ஹியூக் எட்மீடஸ். விளையாட்டு மட்டுமின்றி, பொருட்கள் விற்பனை, தொண்டு நிறுவனங்களுக்கு நிதி பெறுவது என மொத்தம் 2,500 க்கும் அதிகமான ஏலத்தை நடத்தியவர் ஹியூக் எட்மீடஸ். இவரது சொந்த நாடு பிரட்டன். ஏராளமான கலைப் பொருட்கள், பழங்கால ஓவியங்கள், பாதுகாக்கப்படும் பொருட்கள், வரலாற்று பதிவேடுகள் என பல ஏலங்களை நடத்தி உள்ளார்.
பிரிட்டன் இளவரசி டூ ஜேம்ஸ் பாண்ட்
மறைந்த பிரிட்டன் இளவரசி மார்க்கரெட் மற்றும் எலிசபெத் டெய்லர் ஆகியோரின் வரலாற்று சேமிப்புகள், ,ஜேம்ஸ் பாண்ட் பயன்படுத்திய ஆஸ்டன் மார்ட்டின் கார் போன்றவற்றை ஏலத்தில் விற்கும் பணியில் ஈடுபட்டதும் இவர்தான். அதேபோல் பல தொண்டு நிறுவனங்களுக்கான ஏலங்களையும் இவர் நடத்தி ஏழைகள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் கிடைக்க வழிவகை செய்து உள்ளார்.
ரூ.237.31 பில்லியன் மதிப்பில் ஏலம்
கடந்த 35 ஆண்டுகளில் மட்டும் ஹியூக் எட்மீடஸ் 3 லட்சத்து 10 ஆயிரம் பொருட்களை ஏலத்தில் விற்றுக்கொடுத்து இருக்கிறார். இவர் ஏலத்தில் பங்கேற்ற நிகழ்வுகளில் மட்டும் 2.7 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பொருட்கள், வீரர்கள் ஏலம் விடப்பட்டு உள்ளன. இந்திய மதிப்பில் இது ரூ.237.31 பில்லியனை எட்டும்.
2022 ஐபிஎல் ஏலம்
இப்படி பல ஏலங்களை ஹியூக் எட்மீடஸ் நடத்தி இருந்தாலும், 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக நடைபெற்ற மெகா ஏலத்தை இவராலும், இந்திய மக்களாலும் அவ்வளவு எளிதில் மறந்துவிடவே முடியாது. பெங்களூருவில் நடைபெற்ற அந்த ஏலத்தில் இலங்கையின் ஹசரங்கா பெயரை ஏலத்துக்காக உச்சரித்த எட்மீடஸ் அப்படியே மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மயங்கி விழுந்த எட்மீடஸ்
நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்த அந்த ஏல நிகழ்ச்சியின் வீடியோ வெளியாகி பலரும் எட்மீடஸ் உடல்நலன் குறித்த தங்கள் வேதனையை வெளிப்படுத்தி அவர் விரைந்து நலம்பெற வாழ்த்தினர். ஐபிஎல் அணிகளும் எட்மீடஸுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தன. இந்த நிலையில் இன்றைய ஐபிஎல் ஏலத்தில் ஹீரோவாக வருகிறார் எட்மீடஸ்.