கோவையில் அதிர்ச்சி.. நடந்து சென்ற பெண்ணிடம் இளைஞர் செய்த அசிங்கம்.. கூச்சலிட்டதும் பைக்கில் எஸ்கேப்
கோவை: கோவையில் நாளுக்கு நாள் பாலியல் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. நேற்று முன்தினம் சாலையில் நடந்து சென்ற பெண்ணை பின்தொடர்ந்த இளைஞர் அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, நெல்லையை சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெண் குழந்தைகள், பெண்கள், மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாலியல் பிரச்சனைகளுக்கு ஆளாகி வருகின்றனர். பள்ளி, கல்லூரி, பொது இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேற்றப்படுகின்றன.

வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி ஒருவரை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, மணப்பாறையில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பள்ளி தாளாளரின் கணவர், ஆசிரியர் உள்ளிட்டோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் அருகில் உள்ள மாவட்டமான திருப்பூரில் வேலை தேடி வந்த பெண் கணவன், குழந்தைகள் கண் முன்னே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்குச் செல்வதற்காக இளம்பெண், கணவர் மற்றும் குழந்தை ஆகியோர் ரயில் நிலையத்தில் காத்திருந்துள்ளனர்.
அங்கு வந்த பீகாரைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பனியன் நிறுவனத்தில் வேலை இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்களும் அந்த இளைஞர்களை நம்பிச் சென்றுள்ளனர். திடீரென பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற மூன்று இளைஞர்களும் கத்தி முனையில் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கோவை, பந்தய சாலையில் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஓவிய ஆசிரியரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கோவையில் நேற்று இரவு 8 மணிக்கு சாலையில் நடந்து சென்ற மாணவிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் தனியே நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட இளைஞரை பீளமேடு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 21 வயது இளம்பெண் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரவு 8 மணி அளவில் தனியே நடந்து சென்று கொண்டிருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள அழகுக் கலை மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணின் மீது வாகனத்தில் மோதுவது போல வந்துள்ளார். சுதாரித்துக் கொண்ட இளம்பெண் வேகமாக நடக்கத் தொடங்கியுள்ளார். அப்பெண் சிறிது தூரம் சென்ற நிலையில், அந்த இளைஞர் மீண்டும் பின்தொடர்ந்து வந்து இளம் பெண்ணிடம் பேச முயற்சி செய்துள்ளார்.
அப்போது, திடீரென அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். உடனடியாக அந்தப் பெண் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் குறித்து அந்த இளம் பெண் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை தேடி வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, திருநெல்வேலியைச் சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். தற்போது கோவையில் தங்கி பணிபுரிந்து வரும் அவர் இளம்பெண்ணிடம் அத்துமீறியது தெரியவந்ததையடுத்து, போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications