Annamalai: உங்களை திட்டுனா தமிழ்நாட்டு மக்களை திட்டுகிற மாதிரியா? விஜய்க்கு அண்ணாமலை பதிலடி
கோவை: விஜய்யை திட்டினால் தமிழ்நாட்டு மக்களை திட்டுவதாக அர்த்தம் என்று பேசிய கருத்துக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அரசியலில் இருக்கும் போது எல்லோர் மீதும் விமர்சனம் வைக்கப்படும் என்று கூறிய அண்ணாமலை, தங்கள் மீது வைக்கும் விமர்சனத்தை மக்கள் மீது வைப்பதை போல் அரசியல்வாதிகள் பேசக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பாக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்தும் பொறுப்பு அண்ணாமலை வசம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கவுண்டம்பாளையம் பகுதியில் பாஜகவின் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதன்பின் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சாரம் நடக்கவுள்ளது.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக வரும் போது கூட்டணி கட்சியினர் இடையே ஒரு இணைப்பு இருக்க வேண்டும். திமுகவின் குறைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதேபோல் தமிழக அரசியலில் இது ஒரு துயர நாள். ஏனென்றால் உடல்நிலை சரியில்லாமல் போராடி கொண்டிருந்த அய்யா நல்லகணுக்கு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
ஒரு அரசியல் தலைவருக்கான முழு இலக்கணத்துடன் இருப்பவர். எம்பி, எம்எல்ஏ-வாக கூட இருந்தது இல்லை.. தொடர்ந்து போராட்டக் களத்தில் இருந்தவர். மக்களின் அன்பை பெற்றவர்.. அவருக்கு மரியாதை கலந்து அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன். அதேபோல் அதிமுக - பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு தொடர்பாக தலைவர்கள் பேசி முடிவு எடுப்பார்கள்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியில் ஆட்சியில் பங்கு என்று பேசி கொண்டிருக்கிறார்கள். என்டிஏ கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்று திருமாவளவன் சொல்வது ஏற்புடையது அல்ல. ஏனென்றால் திமுக கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளுக்கும் ஒரு சீட் குறைக்கப் போவதாக கூறி இருக்கிறார்கள். அந்தக் கூட்டணியில் திருமாவளவன் மகிழ்ச்சியாக இருக்கிறாரா?
தேமுதிகவுக்கு தொகுதிகள் ஒதுக்க அத்தனை கட்சிகளும் ஒரு தொகுதியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடக்கிறது. திருமாவளவன் மகிழ்ச்சியாக இல்லை என்பதற்காக, என்டிஏ கூட்டணியிலும் மகிழ்ச்சி இல்லை என்று சொல்ல கூடாது.. அது சந்தர்ப்பவாதம்.. அதேபோல் விஜய்யை பொறுத்தவரை மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.
என்டிஏ கூட்டணியில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள். அதிமுகவில் அமைச்சர்களாக பணியாற்றியவர்கள் உள்ளனர். மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். விஜய்யை விமர்சிப்பது தமிழ்நாட்டு மக்களை விமர்சிப்பதாக அவர் நினைத்து கொள்கிறார். அரசியலில் விமர்சனம் என்பது எல்லோர் மீதும் வைக்கப்படும்.
அதனை மக்கள் மீது வைக்கும் விமர்சனமாக சொல்லக் கூடாது. அரசியல்வாதிகள் அப்படி பேசக் கூடாது. அதேபோல் சசிகலா புதிதாக கட்சி தொடங்கி இருக்கிறார். இன்னும் சில காலம் இருக்கிறது.. பார்க்கலாம்.. ஓபிஎஸ் எங்கள் பக்கம் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஓபிஎஸ் பற்றி பேச விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications