புரட்டாசி முடிஞ்சு சிக்கன் சாப்பிட நினைத்தால்.. கேரளாவிலிருந்து வந்த ஷாக் நியூஸ்! தமிழகத்தில் உஷார்
கோவை: கேரளாவில் கோழிகள், வாத்துகளை பறவைக் காய்ச்சல் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு கேரளா எல்லையான வாழையாறு, உடுமலைப்பேட்டை பகுதியில் பரிசோதனையை தீவிரப்படுத்தி உள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஹரிபாட் நகராட்சிக்கு உட்பட்ட வாழுத்தனம் பகுதியில் H5 N1 என்ற பெயர் கொண்ட பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
அப்பகுதியில் 20 ஆயிரம் வாத்துக்களை வளர்த்து வரும் 2 பண்ணைகளில் 1500க்கும் அதிகமான வாத்துக்கள் பறவைக்காய்ச்சல் காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்து உள்ளன.
பறவைக் காய்ச்சல்
இதன் காரணமாக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் அந்த பண்ணைகளுக்கு சென்ற இறந்த வாத்துக்களின் மாதிரிகளை சேகரித்து மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கிய நோய் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பினர். இதில் வாத்துக்கள் உயிரிழப்புக்கு பறவைக் காய்ச்சலே காரணம் என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
நடவடிக்கை
இதனை அடுத்து ஆழப்புலா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கிருந்து வேறு பகுதிக்கு பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அப்பகுதியை சுற்றி இருக்கும் 20,471 வாத்துக்கள் மற்றும் கோழிகளை கொல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு கோழிப்பண்ணை
கேரளாவில் பரவியுள்ள பறவைக் காய்ச்சல் தமிழ்நாட்டின் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான கோழி, முட்டை பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.
7 கோடி கோழிகள்
நாமக்கலில் 7 கோடி கோழிகளில் அதன் மூலம் 5 முதல் 6 கோடி முட்டைகள் பெறப்பட்டு வருகின்றன. இதில் ஒன்றரை கோடி முட்டைகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தமிழ்நாடு, குஜராத், மேற்கு வங்க, பீகார் ஆகிய மாநிலங்களுக்கும் நாமக்கலில் இருந்து முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதை அறிந்தவுடன் கிருமி நாசினிகளை கொண்டு தூய்மை செய்து வருவதாக நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. கேரளாவில் பறவைக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு இருக்கிறது.
கண்காணிப்பு
தமிழ்நாடு சுகாதாரத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கேரளாவிலிருந்து வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் உள்ள கேரள எல்லையான வாழையாறு மற்றும் உடுமலைப்பேட்டை எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
கிருமி நாசினி
கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினிகளை தெளித்தே அதிகாரிகள் உள்ளே அனுமதித்து வருகிறார்கள். அதேபோல் தமிழ்நாடு கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை கால்நடை பராமரிப்புத்துறை வழங்கி இருக்கிறது.
மருத்துவக் குழு
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், "இதற்கென தனி மருத்துவ குழுவை அமைத்து நிலைமையை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த மருத்துவக் குழு நாமக்கலில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்." என்றார்.