கோவையில் சாலை வலம் சென்ற முதல்வர் ஸ்டாலின்.. தொண்டர்கள் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
கோவை: திருப்பூர் மாவட்டம், உடுமலையில் நாளை நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதற்காக கோவை விமான நிலையம் இன்று வந்தடைந்தார். கோவையில் விமான நிலையம் முதல் அவிநாசி சாலை வரை முதல்வர் சாலை வலம் சென்றார். முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக ஞாயிறன்று மாலை கோவை விமான நிலையம் வந்தடைந்த முதல்வருக்கு, திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவையில் விமான நிலையம் முதல் அவிநாசி சாலை வரை முதல்வர் சாலை வலம் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர். பின்னர், முதல்வர் ஸ்டாலின் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டைக்கு கார் மூலம் புறப்பட்டார். உடுமலைப்பேட்டையில் இன்று இரவு தங்கவுள்ளார்.
உடுமலைப்பேட்டை நேதாஜி மைதானத்தில் நாளை காலை 10:00 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கிருந்து தளபதி அறிவாலயம் கட்சி அலுவலகத்திற்குச் சென்று நிகழ்ச்சியை முடித்துவிட்டு, மதியம் 12:00 மணிக்கு பொள்ளாச்சி செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். பின்னர், மதியம் 12:15 மணிக்கு புறப்பட்டு, 1:15 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார்.
தொடர்ந்து, மதியம் 2:10 மணிக்கு விமானம் மூலம் பயணித்து, மாலை 3:15 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்றடைகிறார். முதல்வரின் வருகையை ஒட்டி அவர் பயணிக்கும் வழித்தடங்கள் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல்வரின் வருகையால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கருமத்தம்பட்டி, தென்னம்பாளையம் ஆகிய இடங்களில் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications