விஏஒ அலுவலகத்தில் பட்டியலின ஊழியரை காலில் விழவைத்த இளைஞர்- வழக்குப் பதிவு செய்ய ஆட்சியர் உத்தரவு
கோவை மாவட்ட அன்னூர் அருகே விஏஒ அலுவலகத்தில் பட்டியலினத் சேர்ந்த உதவியாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த புகார் எழுந்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: அன்னூர் அருகே ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வேலை செய்யும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த உதவியாளர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறும் வீடியோ வைரலாகி வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் வழக்குப் பதிவு செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடினாலும் புத்தகத்தில் உள்ள தலைவர்களின் பெயரில் உள்ள சாதியின் பெயரை அழித்தாலும் சாதி கொடுமை பல ஊர்களில் அரங்கேறிக்கொண்டுதான் உள்ளது. அதற்கு மற்றுமொரு முக்கிய சான்றாக உள்ளது கோவை அன்னூரில் நிகழ்ந்த சம்பவம்.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த ஒட்டர்பாளையம் கிராமத்தில் கலைச்செல்வி என்பவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு உதவியாளராக அதே ஊரை சேர்ந்த முத்துசாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.

வசைபாடிய இளைஞர்
ஒட்டர்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கோப்ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் தன்னுடைய சொத்து விவரங்களை சரிபார்ப்பதற்காக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, ஆன் லைனில் விண்ணப்பித்து வர வேண்டும் என கூறினார். இதனை ஏற்க மறுத்த கோபிநாத் கிராம நிர்வாக அலுவலருடன் சத்தமாக பேசி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

மிரட்டிய இளைஞர்
அப்போது அங்கிருந்த உதவியாளர் முத்துசாமி ஒரு பெண் அரசு அலுவலரிடம் இப்படி பேசக்கூடாது எனவும் முறையான ஆவணங்களை கொண்டு வரும்படியும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபிநாத், அவரை கடுமையாக திட்டி எச்சரித்துள்ளார். சாதியின் பெயரை கூறி திட்டிய கோபிநாத், ஊரில் இருக்க முடியாது எனவும் வேலையை விட்டு தூக்கிடுவேன் என்று முத்துசாமியை மிரட்டினாராம்.

கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்ட உதவியாளர்
இந்த மிரட்டலால் பயந்து போன கிராம உதவியாளர் முத்துச்சாமி அலுவலகத்தில் கோபிநாத்தின் முன்பு மண்டி போட்டு சில நிமிடங்கள் மன்னிப்பு கேட்டார். திடீரென சாஸ்டாங்கமாக கோபிநாத்தில் ககாலில் விழுந்து கதறினார் முத்துச்சாமி. அப்போது விஏஒ கலைச்செல்வி, அண்ணா அண்ணா எழுந்திருக்க என்று கதறினார். அப்போது அசையாமல் நிற்கும் கோபிநாத், மன்னித்துவிட்டேன் முத்து, உணர்ச்சிவசப்படாதே என்று கூறுகிறார். அப்போது அருகில் இருந்த நபர் ஒருவர் அழுதபடி காலில் விழுந்த முத்துச்சாமியை தூக்கி விடும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

வைரலான வீடியோ
இதனை விஏஓ அலுவலகத்திற்கு வந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றது. கிராம நிர்வாக அலுவலகத்தில் பட்டியலினத்தை சேர்ந்த அரசு ஊழியர் அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கிராம நிர்வாக அதிகாரி விளக்கம்
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிராம நிர்வாக அலுவலகர் கலைசெல்வி, இது சாதி ரீதியான பிரச்சனை இல்லை என்று கூறியுள்ளார். கோபிநாத் என்பவர் நேற்றுதான் முதன் முதலாக விஏஒ அலுவலகத்திற்கு வந்ததாகவும், அலுவலக நடைமுறைகள் தெரியாமல் கோபிநாத் சத்தம் போட்டபோது அப்படி செய்யக்கூடாது என உதவியாளர் முத்துச்சாமி எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதற்கு கோபிநாத் , மீண்டும் சத்தமாக முத்துச்சாமியையும் சப்தம் போடவே பயந்து அவரது காலில் விழுந்து விழுந்ததாகவும் கலைச்செல்வி கூறியுள்ளார்.

பதற வைக்கும் வீடியோ
இந்த வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சமீரான் கூறியிருந்தார்.

வழக்குப் பதிவு செய்ய உத்தரவு
இதனிடையே இந்த சம்பவம் குறித்து வட்டாட்சியர், மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட உயரதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனர். கிராம நிர்வாக உதவியாளரை காலில் விழவைத்தது குறித்து வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் சமீரான் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications