"உத்தம ராமசாமி".. கோவை பாஜக தலைவருக்கு சிறை! நீதிபதி வீடு முன்பே கண்டன போராட்டம்! அத்துமீறிய பாஜக
சென்னை: பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைதை கண்டித்து இன்று பாஜகவினர் நீதிபதி வீடு அருகே போராட்டம் செய்தனர்.
இந்து மதத்தில் ஏற்றத்தாழ்வுகள், வேறுபாடுகள் பற்றி திமுக எம்பி ஆ. ராசா சமீபத்தில் பேசி இருந்தார். ஆ. ராசா தனது பேச்சில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான். உச்ச நீதிமன்றம் சொல்கிறது இந்து கிறிஸ்துவனாக இல்லை என்றால், நீ இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பெர்சியனாக இல்லை என்றால் நீ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது.
இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன்.. இந்துவாக இருக்கும் வரை நாம் பஞ்சமன்.
இந்துவாக இருக்கும் வரை தீண்டத்தகாதவர்கள்.. இந்துவாக இருக்கும் வரை நாம் விபச்சாரியின் மகன். இந்த அவலத்தை பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று ஆ. ராசா காட்டமாக பேசி இருந்தார். ஆ. ராசாவின் இந்த பேச்சை தமிழ்நாடு பாஜகவினர், இந்து முன்னணியினர் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.
ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு.. மிரட்டிய கோவை மாவட்ட பாஜக தலைவர் கைது..15 நாட்கள் சிறை
இந்து முன்னணி
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி சார்பாக கோவை பீளமேட்டில் ஆ. ராசாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பாஜகவினர் பலரும் கலந்து கொண்டனர். பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் பேசிய பாலாஜி உத்தம ராமசாமி, ஆ. ராசாவை கடுமையாக தாக்கி பேசினார். அதோடு அவரை ஒருமையில் திட்டி பேசினார். முதல்வரையும் ஒருமையில் பேசினார். இது போக அத்துமீறும் வகையிலும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பாலாஜி உத்தம ராமசாமி பேசினார். அவரின் பேச்சு பெரிய அளவில் சர்ச்சையானது.
மிரட்டல்
இதையடுத்து பாலாஜி உத்தம ராமசாமிக்கு எதிராக தந்தை பெரியார் திராவிட கழகம் போலீசில் புகார் அளித்தது. மேலும் பல்வேறு தரப்பினர் போலீசில் அவருக்கு எதிராக புகார் அளித்தனர். இதையடுத்து இன்று காலை பாலாஜி உத்தம ராமசாமி கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது கலவரத்தை தூண்டுதல், இரண்டு பிரிவினருக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
சிறை
இதை எதிர்த்து அங்கு பாஜகவினர் போராட்டம் செய்தனர். கோவையில் பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் களமிறங்கி பாஜகவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில்தான் அவசர அவசரமாக, மோதலை தடுக்கும் விதமாக, கைது செய்யப்பட்ட 2 மணி நேரத்தில், பாலாஜி உத்தம ராமசாமி கோவையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதில் பாலாஜி உத்தம ராமசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுத்த கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதியின் வீட்டிலேயே நடைபெற்றது.
விசாரணை
அதிகாலை என்பதால் கோர்டில் நடக்காமல், நீதிபதி வீட்டிலேயே விசாரணை நடந்தது. இதை அறிந்து கொண்ட பாஜகவினர் நீதிபதியின் வீட்டிற்கு அருகில் வந்து போராட்டம் செய்தனர். நீதிபதி இல்லம் அருகே குவிந்த பாஜகவினர் காவல்துறைக்கு எதிராக முழக்கம் செய்தனர். பொதுவாக நீதிபதிக்கு எதிராக, அவர்களின் வீடுகளுக்கு எதிராக போராட்டம் நடப்பது அரிது. ஆனால் இன்று பாலாஜி உத்தம ராமசாமி சிறை தண்டனையை கண்டித்து நீதிபதி வீடு முன்பே போராட்டம் நடத்தப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.