உரலில் நெல் குத்தி, கயிறு இழுத்து, கரும்பு சாப்பிட்டு.. கோவை கல்லூரி மாணவிகளின் கலக்கல் பொங்கல் விழா
Recommended Video
கோவை: கோவையில் பாரம்பரிய முறையில் கல்லூரி மாணவ மாணவிகள் பொங்கல் கொண்டாடினார்கள்.
கோவை துடியலூரை அடுத்துள்ள வட்டமலை பாளையம் ஸ்ரீ ராம கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழாவை பாரம்பரிய முறையில் மாணவ மாணவிகள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
கோவை துடியலூரை அடுத்துள்ள வட்டமலைபாளையம் ஸ்ரீ ராம கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ-மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை மற்றும் சேலை அணிந்து பங்கேற்றனர்.
மாணவிகள் மண் பானையில் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என வாழ்த்தி கடவுளுக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து பசு மாடு மற்றும் கன்று குட்டியை வைத்து பூஜைகள் செய்து உணவளித்து மாட்டுப்பொங்கல் கொண்டாடினர்.
தொடர்ந்து மாணவிகளுக்கு உரலில் நெல் குத்தும் போட்டி நடைபெற்றது. இதில் மாணவிகள் உரலில் நெல்லை போட்டு உலக்கையால் குத்தி, நெல்லில் இருந்து அரிசியை பிரித்தெடுத்தனர்.
மேலும் கயிறு இழுக்கும் போட்டிகள், கரும்பு உண்ணும் போட்டிகள் நடைபெற்றன. மாணவர்களுக்கான கண்ணைக் கட்டிக்கொண்டு உறியடித்தல் போட்டி மற்றும் ஜமாப் இசைக்கும் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு நடனம் ஆடி மகிழ்ந்தனர்.