10 பேர் கை மாறி வந்த கார்.. ஓனரை கண்டுபிடிச்சாச்சு.. கோவை போலீஸ் கமிஷனர் வெளியிட்ட பரபர தகவல்!
கோவை : கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த ஜமேஷா முபின் பயன்படுத்திய கார், சுமார் 10 பேரிடம் கை மாறியது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் கைதான 5 பேர் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் கைதான 5 பேர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5 பேர் மீதும் கூட்டுச்சதி செய்தது, இரு பிரிவினர் இடையே மோதல் உண்டாக்குதல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு - 5 பேர் கைது- பாய்ந்தது 'ஊபா' ! என்.ஐ.ஏ. விசாரணைக்கு விரைவில் மாற்றம்?
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு
கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபீன் என்பவர் பலியானார். முதலில் இச்சம்பவம் விபத்து எனக் கருதப்பட்ட நிலையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின, ஜமேஷா முபீனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கு உதவும் பொட்டாசியம் நைட்ரேட், சல்ஃபர், அலுமினியம் பவுடர், சார்க்கோல் உள்ளிட்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
5 பேர் கைது
ஜமேஷா முபின் வீட்டின் முன் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, சனிக்கிழமை நள்ளிரவு 11.25 மணிக்கு ஜமேசா முபீனுடன் 4 பேர் இருந்ததும், அவரது வீட்டில் இருந்து மர்ம பொருள் ஒன்றை அவர்கள் ஐந்து பேரும் தூக்கிச் சென்றதும் பதிவாகி இருந்தது. கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக போலீசார் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை காவல் ஆணையர்
இந்நிலையில், கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக இதுவரை 5 பேரை கைது செய்துள்ளோம். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
22 பேரிடம் விசாரணை
உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் பொட்டாசியம் நைட்ரேட், சல்ஃபர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடயவியல் வல்லுநர்களை வரவழைத்து புலன் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 22 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். வெடி பொருட்களைப் பயன்படுத்தி சிலிண்டர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதால் ஊபா சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊபா சட்டத்தில்
இந்த விவகாரத்தில் கைதான 5 பேர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5 பேர் மீதும் சதி செய்தது, இரு பிரிவினர் இடையே மோதல் உண்டாக்குதல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட நபர்களில் ஒரு சிலரை, என்.ஐ.ஏ விசாரித்துள்ளது. புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
10 கைகள் மாறி
சிலிண்டர் வெடித்த கார், 10 கைகள் மாறி வந்திருக்கிறது. சுமார் 10 பேரிடம் கார் கைமாறிய நிலையிலும் காரின் உரிமையாளரை கண்டுபிடித்துள்ளோம். கைது செய்யப்பட்டவர்கள் மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். யூகங்கள் அடிப்படையில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன." எனத் தெரிவித்துள்ளார்.