கோவையை மையமாக வைத்து கிளப்பிவிடப்படும் மதவெறுப்பு வதந்திகள்..போலீஸ் கமிஷனர் கடும் எச்சரிக்கை
கோவை: கோவையை மையமாக வைத்து மதவெறுப்பு வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்மைக்காலமாக சமூக வலைதளங்கள் மூலமாக கோவை மாநகரில் நடந்ததாக தெரிவித்து அவதூறு தகவல் சமூகவிரோதிகளால் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. அந்த தகவலில் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்துவதற்காக மாற்று மதத்தை சார்ந்த நபர் அவரது வகுப்பு தோழி மூலமாக முயற்சி செய்ததாகவும் இந்த விவரம் தெரிந்து அந்த பெண் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் டெல்லியில் அண்மையில் நடந்த சம்பவத்தை இணைத்து மதவெறுப்பை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய செய்தி பகிரப்பட்டு வருகிறது.

கோவை உட்பட பல ஊர்களின் பெயரை குறிப்பிட்டு பரப்பப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மைத்தன்மையற்றது. இதுபோன்ற சம்பவம் நடந்ததாக தெரியவில்லை. புகாரும் இதுவரை வரவில்லை.
ஏதோ ஆதாயம் பெறும் உள்நோக்கத்துடன் சமூகவலைதளங்களில் யாரோ சிலர் இப்படி பகிர்ந்து வருவதாக தெரிகிறது. இது போன்ற மதத்துவேசத்தை ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான தகவல்களை பரப்புவோர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications