தமிழகத்தில் குற்றங்கள் குறைஞ்சிடுச்சு.. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்கு அறிகுறி.. டிஜிபி பளிச்!
கோவை : தமிழ்நாட்டில் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன, சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று கூறியுள்ளார் தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு.
மேலும், இணைய வழியில் நடைபெறும் மோசடிகள் அதிகரித்துள்ளதாகவும், ஏமாறாமல் இருக்குமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு வருகை தந்தார். மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் சட்டம்- ஒழுங்கு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழை டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார். பின்னர், காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
புயல்..மழை..மக்களுக்கு உதவ தயாராக இருங்கள்..காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
கோவை காவல்துறை சூப்பர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய டி.ஜி.பி சைலேந்திரபாபு, "கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றுகின்றனர். கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் கொலை வழக்குகள், ஆதாய கொலை வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் வழக்கு, தங்க கடத்தல் வழக்குகளில் கோவை காவல்துறை சிறப்பாக செயல்பட்டுள்ளது. கோவையில் மூன்று புதிய காவல் நிலையங்கள் தொடங்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சுந்தராபுரம், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம் பகுதிகளில் மூன்று காவல் நிலையங்கள் அமைய உள்ளது." என்றார்.
கொலை குற்றங்கள் குறைந்துள்ளது
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தைப் பொறுத்தவரை குற்றங்கள் குறைந்துள்ளன. சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 1597 கொலைக் குற்றங்கள் நடைபெற்றது. இந்தாண்டு 1368 கொலைக் குற்றங்கள் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 15 சதவீதம் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது. கொலை குற்றங்கள் குறைந்தால், அந்த ஊரில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் எனக் கூறலாம்.
லேட்டஸ்ட் டெக்னாலஜி
தமிழகத்தில் சென்னை உட்பட அனைத்து மாநகரங்கள், மாவட்டங்களில் அதிகப்படியான சிசிடிவி கேமரா அரசு செலவிலேயே நாம் பொருத்தி வருகிறோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் வேலூர், தஞ்சாவூர், திருச்சி, சென்னை போன்ற இடங்களில் அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ளோம். சிசிடிவி கேமராக்கள் குற்றங்களை கண்டுபிடிக்க பயனுள்ளதாக உள்ளன. தற்போது காவலர்களுக்கு நவீன தொழில்நுட்பங்கள் கொடுத்துள்ளோம். தமிழகம் முழுவதும் பழைய குற்றவாளிகள் சுமார் 75 ஆயிரம் பேரின் புகைப்படம், வீடியோக்களை வைத்துள்ளோம். சந்தேகத்துக்குரிய நபரின் புகைப்படத்தை வைத்தே அவர் குற்றப் பின்னணி உள்ளவரா என கண்டறிய முடியும். முகத்தை வைத்தும், வாகனங்களின் எண்ணை வைத்து கண்டுபிடிக்கக்கூடிய மென்பொருள்கள் நம்மிடம் உள்ளன.
மாநில எல்லைகளில் தீவிரம்
மாநில எல்லையைப் பொறுத்தவரை, கஞ்சா தடுப்புக்காக 6 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. கேரளாவில் இருந்து வரக்கூடிய பயோ கழிவுகளை தடுப்பதற்கும் ஆறு இடங்களில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் அறிவித்த முக்கிய டோல்கேட்டுகளில் நவீன கேமராக்கள் பொருத்தும் பணிகள் தயார் நிலையில் உள்ளது. வாகனக் கண்காணிப்பு தீவிரமாகும்.
சைபர் குற்றங்கள்
இணையவழிக் குற்றங்கள் தான் தற்போதைய டிரெண்டிங். 45 ஆயிரம் இணைய வழி குற்றங்களாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தற்போது வரை தமிழகத்தில் பதிவாகியுள்ளது. படித்தவர்கள் கூட இணைய வழி குற்றங்களில் அதிகம் சிக்குகிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தில் சிறிய தொகையை நீங்கள் வெல்வது போல் காட்டிவிட்டு, பெரிய தொகையை கட்டியவுடன் மோசடி செய்து விடுவார்கள். அலைபேசி வாயிலாக வங்கிக் கணக்கு விவரங்களை பொதுமக்கள் யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். இணைய வழி குற்றங்களை குறைப்பதற்கு காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. " எனத் தெரிவித்தார்.