தமிழ்நாடு ஃபுல்லா.. தேதி குறிச்சாச்சு.. இறங்கியடிக்கும் ஈபிஎஸ்! திமுக இருக்கட்டும்.. டார்கெட்டே வேற!
கோவை : பேரூராட்சி, ஒன்றிய அளவிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. திமுகவை எதிர்ப்பது ஒரு நோக்கம் என்றால், பாஜகவுக்கு தங்கள் பலத்தைக் காட்டுவதே எடப்பாடி பழனிசாமி நடத்தும் போராட்டங்களின் ரகசிய நோக்கம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, உட்கட்சிக் குழப்பங்களில் சிக்கித் தவிக்கிறது என்ற விமர்சனங்களை நொறுக்கும் வகையில், ஆளும் திமுக அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசமி.
திமுக அரசுக்கு எதிராக பாஜகவினர் முன்னணியில் நின்று களமாடி வரும் நிலையில், பாஜகவை ஓவர்டேக் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அடுத்த கட்டமாக ஒன்றிய, பேரூராட்சி அளவில் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
வயிறு எரியுதா? முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி.. என்ன சொன்னார் தெரியுமா?
அதிமுக போராட்டம்
கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் உட்பட பல விவகாரங்களில் அதிமுகவினர் அமைதி காத்து வந்ததும், பாஜகவினர் புகுந்து விளையாடியதும் அரசியல் அரங்கில் கவனிக்கப்பட்டது. இந்நிலையில் தான் பல விவகாரங்களையும் கையில் எடுத்து 7 முன்னாள் அமைச்சர்களோடு சென்று சமீபத்தில் ஆளுநரைச் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. அதோடு தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தவும் தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார். அந்த வகையில் இன்று கோவையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி ஏற்பாட்டில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
வேலுமணி ஏற்பாட்டில்
கோவையை புறக்கணிக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கை கண்டித்தும், சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு சாலைகளை சீரமைக்காதது மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி முன்னிலையில் அதிமுகவினர் கோவையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
கும்பகர்ண தூக்கத்தில்
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகால ஆட்சி பொற்கால ஆட்சி, கடந்த 10 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் கோவை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அதிமுக ஆட்சி பற்றி அவதூறு கூறுவதை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தற்போது வரை என்ன பெரிய திட்டம் கொண்டு வந்தீர்கள்? திமுக அரசை கும்பகர்ண துக்கத்தில் இருந்து விழித்தெழ வைக்கவே இந்த உண்ணாவிரத போராட்டம் எனத் தெரிவித்தார்.
ஈபிஎஸ் சவால்
மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த எந்த வாக்குறுதியையும் தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க நிர்வாகிகள் மீது வேண்டுமேன்றெ பொய் வழக்கு போடுகின்றனர். அ.தி.மு.க ஆட்சியில் நல்ல திட்டங்கள் மற்றும் மக்கள் பெற்ற பலன் குறித்து நான் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளேன். நீங்கள் செய்த திட்டங்கள் மக்கள் பெற்ற பலன்கள் குறித்த என்னுடன் பேச நீங்கள் தயாரா? எனக் கேள்வி எழுப்பினார்.
அடுத்தகட்ட போராட்டம்
மேலும், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும். வருகிற 9ஆம் தேதி பேரூராட்சி பகுதிகளிலும், 12ஆம் தேதி அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும். அதேபோன்று வருகிற 13ஆம் தேதி நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்." என அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ஈபிஎஸ் கணக்கு
எதிர்க்கட்சி யார் என்கிற யுத்தம் அதிமுக - பாஜக இடையே நடந்து வரும் நிலையில், பாஜகவும் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகிறது. பெரிய நகரங்களில் பாஜக போராட்டம் நடத்தினாலும் கூட நூற்றுக்கணக்கில் மட்டுமே கூட்டம் சேர்கின்றனர். இப்போது அதிமுக ஒன்றிய அளவில் நடத்தும் போராட்டங்களுக்கே ஆயிரக் கணக்கில் ஆட்களை திரட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளாராம் எடப்பாடி. இதன் மூலம், அதிமுகவின் பலத்தை பாஜகவும் உணர்ந்து கொள்ளும் என்பது ஈபிஎஸ் போட்டிருக்கும் கணக்கு என்கிறார்கள்.
ஒரே கல்லில்
தொடர்ச்சியாக ஆளுங்கட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதன் மூலம், திமுகவுக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சி அதிமுக என்ற நிலை காப்பாற்றப்படும், ஓ.பன்னீர்செல்வத்தை விட தானே வலிமையான தலைவர் என்ற பெயர் நிலைநாட்டப்படும், போட்டி போடும் பாஜகவுக்கும் தங்களது பலத்தை நிரூபிக்க முடியும், கீழ்மட்ட அளவில் போராட்டங்களை நடத்துவதால் தொண்டர்களை என்கேஜ்டாக வைத்திருக்க முடியும் என ஏகப்பட்ட கணக்குகளை இதன் பின்னணியில் ஈபிஎஸ் போட்டிருக்கிறாராம்.