திருவாரூர் மனைவிக்கு டிமிக்கி.. கள்ளக்காதலிக்காக கோவை வந்த துபாய் ரோமியோ.. சோலியை முடித்த குடும்பம்
கோவை: திருவாரூரில் உள்ள மனைவிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு துபாயில் கள்ளக்காதலியுடன் வாழ்ந்து வந்த டிராவல்ஸ் அதிபரை, மதுவில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்து கோவையில் கள்ளக்காதலியின் குடும்பத்தினர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கள்ளக்காதலியின் தந்தை போலீஸில் சரணடைந்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிகாமணி (47). இவர் துபாயில் டிராவல்ஸ் நிறுவன கிளைகளை வைத்து நடத்தி வந்துள்ளார். சிகாமணி அவ்வப்போது இந்தியாவிற்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த மாதத்தின் கடைசியில் இந்தியாவிற்கு வரவுள்ளதாக சிகாமணி தனது மனைவி பிரியாவிடம் கூறியுள்ளார். கடந்த 24 ஆம் தேதி சிகாமணி துபாயில் இருப்பதாக தனது மனைவி பிரியாவிடம் செல்போனில் பேசியுள்ளார்.

அதற்குப் பிறகு சிகாமணியின் செல்போன் ஸ்விட்ச் ஆஃபிலேயே இருந்துள்ளது. பிரியா பலமுறை தொடர்பு கொண்டும் கணவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. உடனடியாக, பிரியா துபாயில் உள்ள டிராவல்ஸ் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, 21 ஆம் தேதியே சிகாமணி துபாயில் இருந்து புறப்பட்டு விட்டதாகவும், கோவைக்கு அவர் சென்றுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
சிகாமணிக்கும், கோவையைச் சேர்ந்த சாரதா என்ற பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருப்பது பிரியாவுக்கு தெரியும் என்பதால், இதைக் கேட்டு பிரியா அதிர்ச்சி அடைந்துள்ளார். சிகாமணி கோவையில் உள்ள சாரதா வீட்டிற்கு சென்று இருக்கலாம் என பிரியா சந்தேகப்பட்டு, உடனடியாக கோவை பீளமேடு போலீஸில் சென்று விமானம் மூலம் வந்த தனது கணவர் காணவில்லை என புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சந்தேகத்தின்பேரில், கோவை, சரவணம்பட்டியில் உள்ள சிகாமணியின் கள்ளக்காதலியான சாரதாவின் வீட்டில் சரவணம்பட்டி காவல் துறையினர் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அவர்களை போலீசாரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, சாரதாவின் தந்தை தியாகராஜனை தொடர்பு கொண்டுள்ளனர். தியாகராஜன் இரண்டு வழக்கறிஞர்களை அழைத்துக் கொண்டு சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு நேரில் சென்றுள்ளார்.
துபாயில் இருந்து வந்த சிகாமணி உங்கள் வீட்டிற்கு வந்ததாக தகவல் கிடைத்துள்ளது என்று கூறி தியாகராஜனிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். விசாரணை முடிந்து புறப்பட்டுச் சென்ற தியாகராஜன் மறுநாளே கோவை நீதிமன்றத்தில் துபாயில் இருந்து வந்த சிகாமணியை கொலை செய்துவிட்டதாகக் கூறி சரணடைந்து உள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கோவை காந்திமாநகரை சேர்ந்த தியாகராஜன் (69) தனது மனைவியை பிரிந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கோமதி என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. கோமதிக்கு நிலா மற்றும் சாரதா என்ற 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் 4 பேரும் சேர்ந்து ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
அப்போது, சாரதாவிற்கு, குணவேல் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், சாரதாவிற்கு, குணவேலுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தியாகராஜனிடம் தெரிவித்துள்ளார். தியாகராஜன், குணவேலை அழைத்து கண்டித்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தியாகராஜன், குணவேலை சரமாரியாக தாக்கி கொலை செய்தார். அந்த வழக்கில் தியாகராஜன் கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து தியாகராஜன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஜாமீனில் வெளியே வந்தார்.
இதற்கிடையே சாரதா துபாய்க்கு வேலைக்கு சென்றார். அங்கு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த டிராவல்ஸ் நடத்தி வந்த சிகாமணி (47) அறிமுகமாகி உள்ளார். அங்கு அவர்களுக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் அங்கே தனியாக வீடு எடுத்து கணவன் - மனைவி போல வசித்து வந்துள்ளனர். அப்போது, சாரதா ரூ.6 லட்சம் பணத்தை சிகாமணிக்கு கொடுத்துள்ளார். அதனை சாரதா திருப்பி கேட்ட போது சிகாமணி தானும் அதிக அளவில் செலவு செய்திருப்பதால் அந்த பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறியுள்ளார்.
இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் துபாயில் இருந்து சாரதா கோவை திரும்பினார். சாரதா அவரது வீட்டில் சிகாமணி உடனான பழக்கத்தையும், அவர் பணத்தை திருப்பி தராததையும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, சிகாமணி சாரதாவை சமாதானம் செய்வதற்காக கடந்த 21 ஆம் தேதி கோவை வந்துள்ளார்.
கோவை வந்த அவரை சாரதா குடும்பத்துடன் விமான நிலையம் சென்று வரவேற்றுள்ளனர். அதேசமயம் மகளை ஏமாற்றியதால் கடும் கோபத்தில் இருந்த தியாகராஜன், மகளின் கள்ளக்காதலன் சிகாமணியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்காக நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி பசுபதி பாண்டியன் கூட்டாளி குட்டி தங்கம் என்கிற புதியவன் என்பவரை கோவைக்கு வரவழைத்தார்.
சிகாமணிக்கு சாரதா குடும்பத்தினர் விருந்து வைத்து சிறப்பாக கவனித்துள்ளனர். பின்னர், அன்று இரவு சிகாமணியை கொலை செய்ய முடிவு செய்த அவர்கள் மது குடிப்பதற்காக சிகாமணியை அழைத்துள்ளனர். தியாகராஜன், புதியவனுடன் சேர்ந்து பீர் குடித்துள்ளார். அப்போது பீர் மற்றும் இறைச்சியில் 30 க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை கலந்த கொடுத்துள்ளனர். இதனால், மது அருந்திய சிறிது நேரத்திலேயே சிகாமணி மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த சாரதா உடனே சிகாமணி மீது ஆத்திரம் அடைந்து அவரை சரமாரியாக தாக்கினார்.
சிகாமணி உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர், தியாகராஜன், புதியவன், சாரதா ஆகியோர் சிகாமணியின் உடலை கார் டிக்கியில் ஏற்றி கொண்டு கரூர் பெண்ணமராவதி பகுதிக்குச் சென்று, அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை வீசிவிட்டு, அங்கிருந்து திருச்சி புறப்பட்டு சாரதாவை விமானம் மூலம் துபாய்க்கு அனுப்பி வைத்தனர். திருச்சியில் இருந்து புதியவன் நெல்லைக்கும், தியாகராஜன் கோவைக்கும் திரும்பியுள்ளனர்.
இதற்கிடையே சிகாமணி உடலை கைப்பற்றிய கரூர் பெண்ணமராவதி போலீசார் அடையாளம் தெரியாத உடல் என வழக்குப் பதிவு செய்து அவரது உடலை அடக்கம் செய்துள்ளனர். அடையாளம் தெரியாத உடல் என போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். ஒரு பக்கம் சிகாமணியின் மனைவி கோவை போலீசில் புகார் அளித்து போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட தியாகராஜன், கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
போலீசில் சரணடைந்த தியாகராஜனை காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த சாரதா, ரவுடி பசுபதி பாண்டியன் கூட்டாளி புதியவன் உள்ளிட்டோரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications