"குணமா பார்த்துக்கிறதுல" கோவையை அசைக்க முடியாதுங்ணா.. பூனைக்கு வளைகாப்பு நடத்திய பாசக்கார குடும்பம்!
கோவை: பாசத்தில் கோவை மக்களை அடித்துக் கொள்ள முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் தாங்கள் வளர்த்த செல்லப்பிராணிகளான பூனைகளுக்கு வளைகாப்பு நடத்திய கோவை தம்பதிகளின் செயல் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.
Recommended Video
தங்கள் குடும்பத்தினருக்கு வாரிசைப் பெற்றுக் கொடுக்கும் பெண்களுக்கு தங்களால் முடிந்த அளவு எளிமையான முறையிலோ அல்லது பிரம்மாண்டமாகவோ உறவினர்களை அழைத்து வளைகாப்பு நடத்தும் வழக்கம் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. வளைகாப்பின் போது வளையல்கள் அணிவித்து அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை பரிமாறுவது தமிழர்களின் பாரம்பரியமான வழக்கங்களில் ஒன்று.
சில நேரங்களில் தங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு வளைகாப்பு நடக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையை சேர்ந்த காவலர் ஒருவர் தான் வளர்க்கும் நாய்க்கு வளைகாப்பு நடத்தினார. சில ஆண்டுகளுக்கு முன்பு பசுமாடும் வளைகாப்பு நடத்திய சம்பவம் நடைபெற்றது. இந்த நிலையில்தான் கோவையில் தங்கள் வளர்க்கும் இரு பூனைகளுக்கு தம்பதியினர் வளைகாப்பு நடத்திய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வளர்ப்பு பூனைகள்
கோவை அருகே வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த உமா மகேஷ் சுபா தம்பதியினர் இரண்டு பூனைகள் வளர்த்து வருகின்றனர். வெளிநாட்டு வகையான பிரசியன் பூனைகளுக்கு ஜிரா மற்றும் ஐரிஸ் எனப் பெயரிட்டு தங்கள் சொந்தக் குழந்தைகளைப் போல வளர்த்து வந்தனர். வெளியூர் சென்றால் பூனைகளை கவனிக்க முடியாது என்பதற்காக வீட்டில் ஒருவர் இருந்து கவனிக்கும் அளவுக்கு அந்த பூனைகளுக்கு செல்லம் கொடுத்து வளர்த்து வந்ததாக கூறுகின்றார் தம்பதியினர்.

பூனைகளுக்கு வளைகாப்பு
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூனைகளின் வயிறு பெரிதாக ஆனதால் கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று பரிசோதித்தனர் தம்பதியினர் அப்போது அவை கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து மகிழ்ச்சி அடைந்த தம்பதியினர் பூனைகளுக்கு வளைகாப்பு செய்ய வேண்டும் என திட்டமிட்டு உள்ளனர்.

வளையல்கள் அணிவிப்பு
பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்த திட்டமிட்டாலும் கொரோனா காரணமாக ஏற்பாடுகளை எளிமையாக செய்தனர் இந்த நிலையில் ஆர்எஸ் புரம் பகுதியில் அமைந்துள்ள செல்லப்பிராணிகள் வளர்ப்பு நிலையத்தில் வைத்து அந்த பூனைகளுக்கு வளைகாப்பு நடத்தினர். பெண்களுக்கு செய்வது போலவே செல்லப்பிராணிகளை அலங்கரித்து வளையல்கள் அணிவித்து கேக் வெட்டி பலன்கள் ஸ்வீட் கொடுத்து வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்திய அளவில் ட்ரெண்ட்
மேலும் அந்த பூனைகளுக்கு என்று சிறப்பாக தனியாக ஆடைகளை தயாரித்து மாலை அணிவித்து கழுத்தில் மணி கட்டி கொண்டாடிய இந்த வளைகாப்பு நிகழ்ச்சி இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. மனிதர்களை மனிதர்களே மதிக்காத நிலையில் தங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளான பூனைகள் வளைகாப்பு நடத்திய கோவை தம்பதியினருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுக்களும் பூனைகளுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது












Click it and Unblock the Notifications