‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’.. கோவையில் தொடங்கிய விழிப்புணர்வு பயணம்
கோவை: கோவை மாவட்டத்தில் 'இல்லம் தேடி கல்வித் திட்டம்' குறித்த கலைக் குழுவின் விழிப்புணா்வுப் பயணத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் நவம்பர் 26ம் தேதி தொடங்கி வைத்தாா்.
Recommended Video
நீண்ட நாட்களாக பள்ளிக்கு செல்லாததால் மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்க இல்லம் தேடி கல்வி திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 2 லட்சம் தன்னார்வலர்களை நியமிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இல்லம் தேடிக் கல்வித் திட்டம்
கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகளில் ஒன்றரை ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. தற்போது தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த இடைவெளியில் பெரும்பாலான மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த இடைவெளியை குறைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளது.

2 லட்சம் தன்னார்வலர்கள்
இந்தத் திட்டத்தில் தன்னார்வலர்கள் பங்கேற்று குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது இதில் பங்கேற்கும் தன்னார்வலர்கள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 6 மணிநேரம் செலவிடுவார்கள். தமிழ், ஆங்கிலம், கணிதம் தெரிந்த தன்னார்வலர்கள் மட்டுமே இதில் பங்கேற்பர். இவர்களுக்கான உபகரணங்கள் அரசு சார்பில் வழங்கப்படும். இந்த திட்டத்துக்காக 2 லட்சம் தன்னார்வலர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இவர்களுக்கு மாத ஊதியமாக, ரூ.1000 வழங்கப்படும்.

ஒரு லட்சம் பேர் ஆர்வம்
இதுவரை இத்திட்டத்தில் சேர முனைவர் பட்டம் முடித்த 450 பேர் உட்பட மொத்தம் 1 லட்சம் பேர் பதிவு செய்து உள்ளனர். இவர்களில் முதுகலை பட்டதாரிகள் மற்றும் பட்டதாரிகள் 50 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனாலும் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு மாணவர்கள், பெற்றோரிடையே போதுமானதாக இல்லை.

கலைக்குழு வாகனங்கள்
எனவே அவர்களுக்கு இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, கலைக்குழுக்கள் மூலம் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் அல்லது ஆட்சியர்கள் தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார்.

ஒரு மாதம் விழிப்புணர்வு
பின்னர் கலைக்குழு வாகனங்கள் புறப்பட்டு சென்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 நாட்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விழிப்புணர்வு பயணத்தில் 6 கலை குழுக்கள் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளனர். கிராம புறங்களில் அதிக கவனம் செலுத்தி விழிப்புணர்வு நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications