“பிரைன் வாஷ்” நடந்துள்ளது.. இஸ்லாத்தில் பயங்கரவாதம் இல்லை - போலீசுக்கு உதவும் கோவை ஜமாத் கூட்டமைப்பு
கோவை: கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், இறந்த ஜமேஷ் முபினுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை எனவும் கோவை இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
கோவை மாவட்டம் உக்கடம் அருகே கடந்த ஞாயிறுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் மாருதி கார் ஒன்றில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதில் அதில் இருந்த ஜமேஷ் முபின் என்ற நபர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறை இறந்த ஜமேஷ் முபின் கடந்த 2019 ஆம் ஆண்டு என்.ஐ.ஏ. விசாரணை உட்படுத்தப்பட்டவர் என்பதை கண்டறிந்தது.
வெடித்து சிதறிய சென்னை பதிவு எண் கொண்ட கார் 10 பேரின் கை மாறி இருப்பதாகவும் கடையாகவே ஜமேஷ் முபின் அதை வாங்கியுள்ளார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

5 பேர் கைது
சிலிண்டர் வெடித்த காரில் ஆணிகள், பால்ரஸ்கள் இருந்ததாகவும், இறந்த ஜமேஷ் முபின் வீட்டில் வெடி மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள். ஜமேஷ் முபினுடன் நெருக்கமாக இருந்த 5 பேரை யுஏபிஏ பிரிவின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர்.

என்.ஐ.ஏ. விசாரணை
நேற்று நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள இன்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் இதுதொடர்பாக இன்று ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரணையை தீவிரப்படுத்தவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் உத்தரவிட்டதுடன், என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைத்தார்.

ஜமாத்துகள்
கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கு ஏற்கனவே உடனடியாக கண்டனம் தெரிவித்த கோவை இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், ஜமேஷ் முபினின் உடலை அடக்கம் செய்திடவும் மறுப்பு தெரிவித்தனர். போலீசார் மேற்கொண்டு வரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர்கள் கூறினர்.

துணைபோக மாட்டோம்
இந்த நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பின் நிர்வாகிகளை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இனாயத்துல்லா, எந்த விதமான தீவிரவாத்துக்கும் துணைபோக மாட்டோம் என உறுதியளித்தார்.

மூளை சலவை
தொடர்ந்து பேசிய அவர், "நடந்த சம்பவத்தைக் வன்மையாக கண்டிக்கிறோம். இறந்த ஜமேஷ் முபின் மற்றும், கைது செய்யப்பட்ட நபர்ககள் யாரும் எந்த ஜமாத்துடனுடன் தொடர்பில் இல்லை. அவர்கள் ஏதோ ஒரு இயக்கத்துடன் தொடர்பில் இருந்து மூளை சலவை செய்யப்பட்டு இந்த செயலைக் செய்திருக்கிறார்கள். இஸ்லாம் மார்க்கம் எந்த பயங்கரவாதத்தையும் போதிப்பதில்லை.

அரசியல் பதற்றம்
தமிழகத்தில் அரசியல் பதட்டத்தை சிலர் ஏற்படுத்துகிறார்கள். பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும். கோவையில் இதுபோல் சந்தேகப்படும் நபர்கள் இருக்கிறார்களா என்பதை ஜமாத்துகள் அறிந்து காவல் நிலையத்துடன் தொடர்பு கொண்டு அடையாளம் கண்டு அவர்களைக் நேர்வழிபடுத்த முயல்வோம்." என்றார்.












Click it and Unblock the Notifications