புதிதாக இனி டாஸ்மாக் கிடையாது.. ஓராண்டில் மூடியது எத்தனை? - பெண்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்!
கோவை : தமிழ்நாட்டில் இனி புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகள் தற்போது இடமாற்றம் மட்டுமே செய்யப்படுவதாகவும், இடமாற்றம் செய்யப்படும் டாஸ்மாக் கடைகளை அப்பகுதி மக்கள் வேண்டாம் என்று கூறினால் திறக்கப்படாது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, வரக்கூடிய காலங்களில் கோவை மாவட்டத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை முதல்வர் வழங்க உள்ளதாகத் தெரிவித்தார்.
அரைவேக்காடு அண்ணாமலை..! நானும் இருக்கேனு காட்டிக் கொள்ள பேசுகிறார்..! விளாசிய செந்தில் பாலாஜி!
முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 829 பயனாளிகளுக்கு தலா 2.10 லட்சம் மானியத்துடன் பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணி ஆணைகளையும் 11 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.
செந்தில் பாலாஜி
முன்னதாக கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இத்திட்டத்திற்காக இன்று கோவை மாவட்டத்திற்கென முதல்வர், 18 கோடியே 45 லட்சம் மதிப்பிலான ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளதாகவும் வரக்கூடிய காலத்தில் மிதமுள்ள பயனாளிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்தார்.
டாஸ்மாக் கடைகள்
திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இந்த ஓராண்டு காலத்தில் தமிழகத்தில் 45 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன எனக் கூறிய அவர் தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகள் இனி திறக்கப்படாது என்றும் இடமாற்றம் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது என்றும், அதனை அப்பகுதி மக்கள் வேண்டாம் என்று கூறினால் அதனை வலுக்கட்டாயமாக திறப்பது கிடையாது எனவும் தெரிவித்தார்.
குறை தீர்க்கும் சேவை
கோவை மாவட்ட மக்களின் குறைகளை தீர்க்கும் கோவை 24×7 சேவையில் 8,407 அழைப்புகள் வந்த நிலையில் 4,637 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனவும் மீதமுள்ள புகார்களுக்கும் தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சேவை தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
குறைக்க நடவடிக்கை
கவுண்டம்பாளையம் மேம்பாலம் திறப்பு குறித்து கேட்ட கேள்விக்கு "நாளை சந்திப்போம்" எனப் பதிலளித்தார். மேலும் சிலர் தாங்களாகவே திறந்து கொள்வோம் என கூறி வருவதற்கு அவ்வாறு திறந்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தார். வாலாங்குளம் படகு சவாரியில் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர் சுற்றுலா துறை சார்பில் அந்தக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இது குறித்து கடிதம் அனுப்பப்பட்டு கட்டணத்தௌ குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
கோவை மாவட்டத்திற்கு
மேலும், "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்திற்கு மட்டும் 18.45 கோடி ரூபாய் மதிப்பிலான ஒதுக்கீடுகளை முதல்வர் இன்று வழங்கியுள்ளார். எஞ்சிய பயனாளிகளுக்கு அடுத்து வரும் நாட்களில் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும். வரக்கூடிய காலங்களில் கோவை மாவட்டத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை முதல்வர் வழங்க உள்ளதாகத் தெரிவித்தார்.