ரஜினிகாந்த் ரசிகர் ஒரு நாள் என் வீட்டிற்கு வந்தார்! திருமண விழாவில் பிளாஷ்பேக் கூறிய ஸ்டாலின்!
கோவை: ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்து அதிலிருந்து விலகி மதியழகன் எம்.எல்.ஏ. திமுகவில் இணைந்த விவரத்தை திருமண விழாவில் மிகவும் சுவாரஸ்யமாக எடுத்துக் கூறினார் முதல்வர் ஸ்டாலின்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மதியழகன் மகன் திருமணத்தை கோவையில் நடத்தி வைத்து பேசிய போது அவர் இந்த பிளாஷ்பேக் கதையை கூறினார்.
அதன் விவரம் வருமாறு;
கொங்குவில் முதல்வர்.. 2 ஆயுதங்கள் இருக்கு.. எடப்பாடி பழனிசாமியை
ரஜினிகாந்த் ரசிகர்
''நம்முடைய மதியழகன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்றைக்கு பர்கூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு நம்முடைய இயக்கத்தில் வந்து சேர்ந்தவர். ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தில், அந்த அமைப்பில் ஒரு முக்கியப் பொறுப்பில் இருந்து பணியாற்றிக் கொண்டிருந்தவர். ஒரு நாள், என்னை வந்து இல்லத்தில் சந்தித்து, நான் இந்த இயக்கத்தில் சேரப் போகிறேன், சேர வேண்டும், அதற்கு நீங்கள் அனுமதி தரவேண்டும் என்று கேட்டார்.''
நல்ல உழைப்பாளி
''நானும் அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய நம்முடைய கழக நிர்வாகிகளோடு கலந்துபேசி அதற்குப் பிறகு சொல்கிறேன் என்று சொல்லி, அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடியவர்களிடத்தில் விசாரித்த நேரத்தில், அவர் வந்தால் நிச்சயமாக நாம் சேர்த்துக் கொள்வோம், அவருக்கு ஒரு மிகப்பெரிய செல்வாக்கு இந்தப் பகுதியில் இருக்கிறது, நல்ல உழைப்பாளி, எல்லோரிடத்திலும் சிறப்போடு, அன்போடு, பாசத்தோடு பழகக்கூடியவர் என்று எடுத்துச் சொன்னார்கள்.''
வெற்றிக்கு துணை
''மதியழகன் வந்தால் கழகத்திற்கு ஒரு நல்வரவாக, கழகத்திற்கு மேலும் வலு சேர்க்கக்கூடிய வகையில் நிச்சயம் அமையும் என்று எல்லோரும் எடுத்துச் சொன்னார்கள். அவைகள் எல்லாம் பொய்யாக இல்லை, அது உண்மையாக இருக்கிறது. அந்த வகையில் நம்முடைய மதியழகன் அவர்கள் இயக்கத்தில் சேர்ந்து, மிகச் சிறப்பாக பணியாற்றி, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அவரும் ஒரு துணையாக இருந்த பணியாற்றியிருக்கிறார், பாடுபட்டிருக்கிறார், துணை நின்றிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கிறபோது, நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்.''
சேர்த்ததில் தவறில்லை
''மதியழகன் சட்டமன்றத்தில் உரையாற்றுகின்ற பாணியை நான் கூர்ந்து கவனித்ததுண்டு. தொகுதி மக்களுடைய பிரச்சனைகள், மாவட்டத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள், தமிழகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள், ஒட்டுமொத்தமாக அனைத்தையும் தெளிவாக, விளக்கமாக, விரிவாக அந்த அவையில் எடுத்துவைத்து வாதிடுகிற அந்தப் பாணியையெல்லாம் பார்க்கிறபோது, நிச்சயமாக அவரைச் சேர்த்ததில் எந்தத் தவறும் இல்லை, அவரைச் சேர்த்ததில் இந்த இயக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய பெருமை வந்து சேர்ந்திருக்கிறது. ''