கோவையில் செந்தில் பாலாஜியை அனுப்பி வித்தை காட்டுகிறார் ஸ்டாலின்.. வானதி சீனிவாசன் பேட்டி
கோவை: கோவை வடக்கு பாஜக வேட்பாளர் அளித்த பேட்டியில், கோவையை கெடுப்பதற்காகவே திட்டமிட்டு, கோவையை பழிவாங்குவதற்காகவே முதலமைச்சர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அனுப்பி இந்த வித்தையை காட்டிக் கொண்டிருக்கிறார். கோவை மக்கள் ஸ்டாலினுக்கும், திமுகவிற்கும் பாடம் புகட்டுவார்கள். போதைப் பொருளால் ஆதாயம் அடைந்து அந்த பணத்தைக் கொண்டு எதிர்கால சந்ததியை தொலைத்து கொண்டிருக்கிறார்கள். எனவே மக்கள் தெளிவாக வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இன்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோவை சிவசக்தி காலனி பகுதியில் இருசக்கர வாகன பேரணியுடன் இந்த வாக்கு சேகரிப்பு துவங்கியது.

இப்பேரணியை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்ததுடன், இருசக்கர வாகனத்தை இயக்கினார்.. அதில் கோவை வடக்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் அண்ணாமலை உடன் அமர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் நூற்றுக்கணக்கான பாஜக அதிமுக கூட்டணி தொண்டர்கள் வாகன பேரணியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேரணிக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் கூறுகையில், " தேர்தலுக்கு இரண்டு நாளே உள்ள நிலையில் நிறைவு நாள் பிரச்சாரம் இரு சக்கர வாகன பேரணியுடன் துவங்குகிறோம். கடந்த முறை போலவே கோவை மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.
கோவை மாநகரில் இரண்டு நாட்களாக கரூர் ரவுடி கும்பல் வாயிலாக மிரட்டுவது நடக்கிறது. காவல் துறையை மிரட்டுவது, காவல் நிலையத்திலேயே ரகளை செய்வது நடக்கிறது. எதிர்க்கட்சியினரை தாக்குவது போன்ற செயல்களில் கரூர் ரவுடி கும்பல் ஈடுபட்டு உள்ளார்கள்.. கோவையை கொள்ளை அடிப்பதற்காக ஸ்டாலினால் அனுப்பப்பட்ட செந்தில் பாலாஜி ஆட்கள் அதனை அரங்கேற்றி வருகிறார்கள். கோவை மக்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள்.
திமுகவினர் ஒரு சில தொகுதிகளில் 2500 ரூபாயும் செந்தில் பாலாஜி போட்டியிடும் தெற்கு தொகுதியில் 5000 ரூபாயும் வாக்காளர்களுக்கு கொடுக்கிறார்கள்.. அந்த பணம் எல்லாம் எங்கிருந்து வந்தது? டாஸ்மாக்கில் கொள்ளையடித்த ஆயிரம் கோடி ரூபாய் பணம் மணல் மாஃபியா மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஆகும்.
கோவையை கெடுப்பதற்காகவே திட்டமிட்டு, கோவையை பழிவாங்குவதற்காகவே முதலமைச்சர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அனுப்பி இந்த வித்தையை காட்டிக் கொண்டிருக்கிறார். கோவை மக்கள் ஸ்டாலினுக்கும் திமுகவிற்கும் பாடம் புகட்டுவார்கள்.
போதைப் பொருளால் ஆதாயம் அடைந்து அந்த பணத்தைக் கொண்டு எதிர்கால சந்ததியை தொலைத்து கொண்டிருக்கிறார்கள். எனவே மக்கள் தெளிவாக வாக்களிக்க வேண்டும்" இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.














Click it and Unblock the Notifications