கோவை பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு சொந்தமான கடைகளில் ஒரே நேரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
கோவை: கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள பாஜக மண்டலத் தலைவருக்கு சொந்தமான கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
மனுஸ்மிரிதி குறித்து திமுக எம்பி ஆ ராசா கருத்து தெரிவித்திருந்த நிலையில் அதை கண்டித்து பாஜகவினரும் இந்து அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆ ராசாவை முதல்வர் ஸ்டாலின் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

இந்த நிலையில் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள் அந்த அமைப்பின் நிர்வாகிகளின் வீடு ஆகியவற்றில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த அமைப்பினர் பெரும் போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று இரவு கோவையில் சித்தாபுதூர் என்ற பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். அது போல் கோவை காந்திபுரத்தில் இருந்த துணிக் கடை மற்றும் 100 அடி சாலையில் உள்ள ரத்தினபுரி பாஜக மண்டலத் தலைவர் மோகனுக்கு சொந்தமான வெல்டிங் கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

அந்த துணிக் கடையும் இந்து முன்னணியினருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. அது போல் பொள்ளாச்சியில் பொள்ளாச்சியை அடுத்த குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பாஜக மாவட்டச் செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த சரவணன் ஆகியோர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
இதில் இரு கார், இரு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications