எஸ்.பி.வேலுமணி Vs செந்தில்பாலாஜி... யார் கை ஓங்கும்..? களைகட்டப் போகும் கோவை அரசியல்..!
கோவை: கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் களம் அங்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கோவை அதிமுகவின் கோட்டையாக திகழும் சூழலில், அங்கு செந்தில்பாலாஜி முன்னெடுக்கவுள்ள அரசியல் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எஸ்.பி.வேலுமணியும் சரி, செந்தில்பாலாஜியும் சரி யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை என்பதால் இனி கோவை மாவட்ட அரசியலில் அனல் பறக்கும் என்பது உறுதி.
எல்லாம் ஓகே.. 2 விஷயத்தில் சிக்கல்.. இப்படியே போனால் உலக கோப்பை வெல்வது கஷ்டம்.. கவனிப்பாரா தோனி?
மாவட்ட வளர்ச்சி
மாவட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக 16 மாவட்டங்களுக்கு 14 அமைச்சர்களை முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்துள்ளார். அந்த வகையில் கோவை மாவட்டத்துக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக இந்த நியமனம் என்றாலும் கூட, எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியை திமுக கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவே செந்தில்பாலாஜி கோவைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
முன்னோட்டம்
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு எதிராக அலை வீசினாலும் கோவை மாவட்டத்தில் உள்ள மொத்த தொகுதிகளையும் அந்தக் கட்சி கைப்பற்றியது. இதனை இன்னுமும் முதலமைச்சர் ஸ்டாலினால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தி கொண்ட அவர், நிர்வாகிகளை மாற்றும் திட்டத்தையும் கையில் வைத்திருக்கிறார். இதனிடையே அதற்கு முன்னோட்டமாக அங்கு செந்தில்பாலாஜி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.
வளர்ச்சிப் பணிகள்
அரசு ரீதியிலான மாவட்ட வளர்ச்சிப் பணிகளை ஒரு புறம் செந்தில்பாலாஜி மேற்கொண்டாலும் மற்றொரு பக்கம் கட்சி வளர்ச்சிப் பணிகளையும் தீவிரப்படுத்துவார் எனத் தெரிகிறது. எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக செந்தில்பாலாஜி முன்னெடுக்கவுள்ள அரசியலால் இப்போதே அங்கு அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சமூகம், பொருளாதாரம், ஆட்பலம், என சகலத்திலும் எஸ்.பி.வேலுமணிக்கு நிகரானவர் அமைச்சர் செந்தில்பாலாஜி.
வியூகம் அமைத்து
இதனால் இவர்கள் இருவருக்குள் உறுதியாக அரசியல் மல்யுத்தம் நடைபெறத் தொடங்கும். கோவை மாநகராட்சியை அதிமுக தான் கைப்பற்றும் என எஸ்.பி.வேலுமணி மேடைக்கு மேடை பேசி வரும் சூழலில், செந்தில்பாலாஜி என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய இடத்தில் இருக்கும் செந்தில்பாலாஜி, கோவை மாநகராட்சியை திமுக கைப்பற்றுவதற்கான வியூகத்தை அமைத்து அதன்படி நிர்வாகிகளை வேலை வாங்குவார் எனத் தெரிகிறது.
ஒருங்கிணைத்து
கட்சிப்பணிகளிலிருந்து ஒதுங்கியுள்ள சீனியர்களான மு.கண்ணப்பன், பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் மாநகர செயலாளர் வீரகோபால் உள்ளிட்ட பலரையும் ஒருங்கிணைத்து அவர்களது ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க திட்டமிட்டுள்ளார் செந்தில்பாலாஜி.