தலைமறைவாக இருந்ததாக சொல்லப்படும் கோவை மத போதகர் ஜான் ஜெபராஜ் கேரளாவில் கைது
கோவை: கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்படும் மத போதகர் ஜான் ஜெபராஜை கேரளாவில் மூணாறில் வைத்து காட்டூர் போலீஸாரால் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (35). இவர் சமூகவலைதளத்தில் கிறிஸ்தவ பாடல்களை பாடி பிரபலமடைந்தார். கோவையில் கிங்ஸ் ஜெனரேஷன் என்ற தேவாலயத்தில் மத போதகராகவும் இருந்தார்.

இவர் கடந்தாண்டு மே 21 ஆம் தேதி கோவை ஜி.என். மில்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் கலந்து கொண்ட 14, 17 வயதை சேர்ந்த இரு சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
இது குறித்து புகாரின் பேரில் கோவை காந்திபுரம் மத்திய மகளிர் காவல் நிலையத்தில் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தலைமறைவான அவரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, கோவை மாவட்ட காவல் துறை சார்பில் விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஜான் ஜெபராஜ் கேரள மாநிலம் மூணாறில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து காட்டூர் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications