வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - அதிமுக பிரமுகர் ஜெயராமன் வீட்டில் ரெய்டு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக பிரமுகர் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி கீர்த்தி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை: அதிமுக பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயராமன் மற்றும் அவரது மனைவி கீர்த்தி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
கோவை வீரபாண்டி பேரூராட்சி முன்னாள் தலைவரும், அதிமுக பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியச் செயலாளருமான கே.வி.என்.ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள 4 வீரபாண்டி பேரூராட்சியின் தலைவராக கடந்த 2001 முதல் 2016ஆம் ஆண்டு வரை அதிமுகவை சேர்ந்த கே.வி.என்.ஜெயராமன் இருந்தார்.

இவரது வருமானத்தை விட அதிகமாக ரூ.1.45 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அந்த சொத்து மற்றும் நகைகள் அவரது பெயரிலும், மனைவி பெயரிலும் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் பேரூராட்சி தலைவர் கே.வி.என்.ஜெயராமன் மற்றும் அவருடைய மனைவி கீர்த்தி உள்ளிட்டோர் மீது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து இன்று அவரது இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரது இல்லத்தில் இருந்து பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கையை மேலிடத்தில் தாக்கல் செய்ய உள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் வீட்டின் அருகே குவிந்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறை மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த புகார்களில் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து சிக்கிவருகின்றனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, தங்கமணி, கேசி வீரமணி, எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் மற்றும் அண்மையில் கேபி அன்பழகன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.












Click it and Unblock the Notifications