பரம்பிக்குளம் அணையிலிருந்து 2-வது நாளாக வீணாகும் தண்ணீர்- சீரமைப்பு பணி எப்போது?
கோவை: பரம்பிக்குளம் அணையில் மதகு உடைந்ததால் வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி வருகிறது. மதகுகளை சரி செய்வது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோவை பொள்ளாச்சி அருகே தமிழகம்- கேரளா எல்லையில் உள்ள பரம்பிக்குளம் அணை. 72 அடி கொள்ளளவை கொண்டது. இந்த அணையில் 17 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்கு இதன் கொள்ளளவு உள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. அண்மையில் தென்மேற்கு பருவமழையால் பரம்பிக்குளம் அணை முழுவதும் நிரம்பியது. அணையின் 3 மதகுகளிலும் தலா 21 அடி உயரத்திற்கு 35 டன் எடை கொண்ட கதவுகள் உள்ளன. அணை நிரம்பியதால் 3 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

மதகு
இந்த நிலையில் மதகின் நடுவே இணைக்கப்பட்டிருந்த சங்கிலியானது அறுந்துவிட்டது. இதையடுத்து சுவர் இடிந்து மதகு மீது விழுந்தது. இதனால் 2ஆவது மதகு நேற்று முன் தினம் உடைந்துவிட்டது. இதனால் அணையிலிருந்து தண்ணீர் வெளியேறியது. இந்த அணை பாலக்காட்டில் இருந்தாலும் இதை தமிழகம்தான் பராமரித்து வருகிறது.

துரைமுருகன்
தகவலறிந்த அமைச்சர்கள் துரைமுருகன், செந்தில்பாலாஜி பொதுப் பணித் துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவம் இடத்திற்கு சென்றனர். தண்ணீரின் வேகத்தால் மற்ற ஷட்டர்கள் பாதிப்படையாமல் இருக்க குறைந்த அளவிலான தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தற்போது ஷட்டர் உடைந்ததால் சுமார் 6 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.

ரூ. 4 கோடி
இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், 2016 இல் ரூ 4 கோடியில் அணையில் பராமரிப்பு பணிகள் நடந்தன. சங்கிலி உடைந்து கான்கிரீட் தூண் மீது விழுந்தது. அந்த கான்கிரீட் தூண் ஷட்டரை அதிவேகமாக தாக்கியுள்ளது. அதிக அழுத்தம் கொண்ட தண்ணீரும் சேர்ந்து ஷட்டரை மதகின் காடியில் இருந்து பெயர்த்து தண்ணீரில் அடித்து செல்ல காரணமாக இருந்திருக்கும்.

ஷட்டர் சீரமைப்பு
மதகுக்கு கீழ் வரை நீர் வெளியேறிய பிறகே ஷட்டர் சீரமைப்பை மேற்கொள்ள முடியும். அது வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அணையில் 2ஆவது நாளாக நேற்று வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடிக்கு தண்ணீர் வெளியேறியது. அணையில் நேற்று 64 அடிக்கு நீர் இருந்தது.












Click it and Unblock the Notifications