கோவை தனியார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ வழக்கு ஏன்.. கோவை போலீஸ் விளக்கம்
கோவை: கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி தலைமையாசிரியை மீரா ஜாக்சனிடம் முதல் கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.
Recommended Video
கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அந்த மாணவி முன்னாள் படித்த தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மாணவி புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அப்பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்ட அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து இன்று ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து அவர் நீதிபதி இல்லத்திற்கு இன்று மாலை அழைத்துச் செல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட வடக்கு சரக துணை கமிஷனர் ஜெயசந்திரன் கூறுகையில்
இந்த வழக்கில் பள்ளியின் ஆசிரியர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அழைத்து செல்லப்பட்டு உள்ளார். ஒரு துண்டு சீட்டு கிடைத்தது. அதில் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர் இழப்பு
மேலும் இதில் யாரேனும் இருக்கிறார்களா என்ற விசாரணையானது நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து தெரிந்தும் காவல்துறைக்கு தகவல் அளிக்காத காரணத்தினால் அப்பள்ளியின் முதல்வரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு உள்ளார். மாணவியின் உயிர் இழப்பு குறித்து தொடர் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது" ஜெயசந்திரன் என்றார்.

மிதுன் சக்கரவர்த்தி
இதனிடையே கோவை காவல்துறை சார்பில் இந்த வழக்கு தொடர்பாக செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 12.11.2021-ஆம் தேதி கோவை மாநகரம, பி4 உக்கடம் காவல்நிலைய சரகத்தில் வசித்து வந்த, தனியார் பள்ளியில் +2 வகுப்பு பயின்ற 17 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கோவை மாநகர், அனைத்து மகளிர் காவல்நிலையம் (மேற்கு) குற்ற எண்10/2021 u/s 306 IPC, 9(1), r/w 10 of POCSO Act 2012-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் புலன் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு, இறந்து போன மாணவி பயின்ற தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்த மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியரின் பாலியல் தொந்தரவும் அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலுமே மேற்படி மாணவியின் தற்கொலைக்கு காரணம் எனத் தெரிய வந்ததையடுத்து, மேற்படி எதிரி மிதுன் சக்கரவரத்தி (31), த/பெ காளிமுத்து என்பவர் 12.11.2021-ஆம் தேதி கைது செய்யப்பட்டு உடுமலைப்பேட்டை கிளைச் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

புலன் விசாரணை
மேற்படி தற்கொலை செய்து கொண்டு இறந்து போன மாணவி, எதிரி மிதுன் சக்கரவர்த்தியை தவிர வேறு எவராலேனும்' பாலியல் 'தொந்தரவுக்கும்' மன உளைச்சலுக்கும் உள்ளார்களா என்பதையும் கண்டறியும் நோக்கிலும் தீவிர புலன் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீரா ஜாக்சன்
இவ்வழக்கில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன மாணவி பயின்ற தனியார் பள்ளியின் முதல்வர் திருமதி.மினி ஜாக்சன் (எ) மீரா ஜாக்சன் என்பவர், மேற்படி எதிரி மிதுன் சக்கரவர்த்தியால் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்த விபரங்களை நன்கு அறிந்த பின்னரும் அது குறித்து மேற்படி பள்ளியின் முதல்வர் என்ற முறையில் சட்டப்படி காவல்துறைக்கு புகார் அளிக்க தவறியமைக்காக இவரும் போக்சோ வழக்கின் கீழ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு 14.11.2021 ஆம் தேதி கோவை மாநகர காவல்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவதற்காக நீதிபதியின் முன்பாக ஆஜர் படுத்தப்படுகிறார்.

சட்ட பூர்வ நடவடிக்கை
இவ்வழக்கில் மேலும் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன மாணலி எத்தகைய சூழ்நிலையில் இறந்தார் என்பதையும், அவரது இறப்பிற்கான காரணத்தினையும் கண்டறிந்து சம்மந்தப்பட்ட எதிரிகள் மீது தக்க சட்ட பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு புலன் விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications