கோவை சிலிண்டர் வெடிப்பில் காவல்துறையின் தரமான சம்பவம்! - முதல்வர் பாராட்டியது ஏன்?
கோயம்புத்தூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பாகப் புலன் விசாரணை செய்த காவல்துறையினரைப் பாராட்டி 58 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கியிருக்கிறார்.
இந்தச் சம்பவத்தை வைத்து ஏதாவது அரசியல் செய்துவிட முடியாதா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருந்த நேரத்தில் காவல்துறையினர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
'தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏன் மவுனமாக இருக்கிறார்?' என்றும் 'இச்சம்பவத்தின் விசாரணைத் தகவல்கள் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்' என்று அண்ணாமலை தொடர்ந்து பிரஸ் மீட் மூலம் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார்.
'இந்தச் சம்பவத்தில் காவல்துறை உண்மைத் தகவல்களை வெளியே கூறவில்லை என்றால் நாங்கள் அந்த ரகசியங்களை வெளியிடுவோம். வேறு வழியில்லை' என்றும் பேசி வந்தார்.
கோவை சிலிண்டர் வெடிப்பு கடந்த 23 ஆம் தேதி அதிகாலை நடந்தது. அதன்பிறகு அண்ணாமலை பல பேட்டிகளைக் கொடுத்துவிட்டார். ஆனால் இன்னும் அந்த தங்கமலை ரகசியம் என்ன? என்பதை வெளிப்படுத்தவே இல்லை.
அதற்குள் சம்பவம் நடந்த இடத்தின் அருகே இருந்த கோட்டை ஈஸ்வரன் கோயிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம் படித்து, பயங்கர விபத்து நடக்காமல் தடுத்ததற்காகப் பிரார்த்தனையில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். இது குறித்த அவரது ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், "கோவை மக்களைத் தீவிரவாத தாக்குதலிலிருந்து காத்து அருளிய கோட்டை ஈஸ்வரனைத் தரிசித்து, அவரை வணங்கி அவரது கருணையைப் போற்றி நமது கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுடன் இன்று பிரார்த்தனை செய்தோம்" என்று தெரிவித்திருந்தார்.
அதாவது அண்ணாமலை மறைமுகமாக என்ன சொல்கிறார் என்றால், தமிழகக் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டு அச்சம்பவத்தைத் தடுக்கவில்லையாம். தெய்வம்தான் தடுத்ததாம். அவரது பக்தி உணர்வை வெளிப்படுத்த வேண்டிய தருணமா இது எனச் சாதாரண மக்கள் கூட கொஞ்சம் யோசிப்பார்கள். ஆனால் அண்ணாமலை ஏனோ யோசிக்கவே இல்லை என்கிறார்கள் சில பதிவர்கள்.
கோவை சம்பவத்தில் திறம்படச் செயல்பட்ட காவல்துறையைப் பாராட்டாத மனம் இல்லாத அண்ணாமலை, குஜராத்தில் மோர்பி பாலம் இடிந்துவிழுந்த 141 பேர் உயிரிழந்த கோரச் சம்பவத்தில் திறம்படச் செயல்பட்ட National disaster response force க்கும் State Disaster Response Force க்கும் நன்றி கூறுகிறார். அந்த மாநிலத்தில் மட்டும் ஏன் தெய்வம் காப்பாற்றவில்லை? பேரிடர் துறையில் உள்ள வீரர்கள் வந்து காப்பாற்றினார்கள் என அண்ணாமலையைக் கேட்க முடியாது. ஏனென்றால் அந்தளவுக்கு துவேஷ விஷ விதையைத் தமிழ்நாட்டில் விதைக்கிறார் அண்ணாமலை என நெட்டிசன்கள் பதிவு போடுகிறார்கள்.
குஜராத் பால விபத்தில்கூட பயங்கர குளறுபடி. அவர் போட்ட முதல் பதிவில் 'ஆழ்ந்த இரங்கல்கள்' என்று கூறுவதற்குப் பதிலாக, 'நன்றிகள்' என ஒரு துக்க செய்திக்குக் கருத்து போட்டிருந்தார் அண்ணாமலை. ஃபேஸ்புக் நபர்கள் பலர், 'ஆழ்ந்த இரங்கல்' என மாற்றுங்கள் என்று திரும்பக் கருத்து போட்டு வறுத்து எடுத்தார்கள். உடனே மறுப்பு கூற வந்த அவர், "குஜராத்தில் நடந்த பால விபத்து குறித்து நான் பதிவிட்டிருந்த செய்தி முகநூலால் தவறாக மொழிபெயர்க்கப்பட்டது. இதனைத் தெளிவுபடுத்தும் விதமாகக் குஜராத் சம்பவத்தைப் பற்றி பதிவிட்டிருந்த செய்தியை தமிழில் மீண்டும் ஒரு முறை பதிவிடுகிறேன்.
குஜராத் மோர்பி நகரில் நடந்த பால விபத்து பெரும் மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்தப் பால விபத்தில் சிக்கிய பலரைக் காப்பாற்றிய மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகளுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!" என்று விளக்கம் கொடுத்தார்.
"குஜராத்தில் பாலம் உடைந்தால் அது விபத்து. அதில் ஊழலோ, அரசின் தவறோ இல்லை எனக் கூறும் அண்ணாமலை திமுக அரசில் எது நடந்தாலும் ஊழல் எனக் கொதித்து எழுகிறார். அவரது இரட்டை நிலைப்பாடு அப்பட்டமாகத் தெரிகிறது"என்கிறார் திமுக இளைஞரணியில் உள்ள ஸ்ரீதர்.
குஜராத் பால விபத்து சம்பவத்தை முன்வைத்து பலர், '20 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக, ஒரு சிமெண்ட் பாலம் கட்டக் கூடாதா?' என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் அதை மறந்த அண்ணாமலை இப்போது வேறு பிரச்சினைக்குச் சென்று விட்டார்.
ஒரு பொதுமக்கள் கூட உயிரிழக்காத கோவை சம்பவத்திற்குப் பிரார்த்தனை நடத்திய அண்ணாமலை, நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்களைப் பறித்த சம்பவத்திற்காக இதுவரை பிரார்த்தனை நடத்தவில்லை. அந்த உயிர்கள் மட்டும் என்ன அவ்வளவு லேசானதா என்ன?
கோவையில் நடந்த சம்பவத்தில் தமிழகக் காவல்துறைக் காட்டிய வேகம் சிறப்பானது. அதாவது காரில் இருந்த சிலிண்டர் வெடித்த நேரம் அதிகாலை 4:05 மணி. தமிழ்நாடு காவல்துறை 4:15க்கு எல்லாம் சம்பவ இடத்திற்குச் சென்றுவிட்டது. அதாவது 10 நிமிடத்தில் காவல்துறை ஆன் த ஸ்பாட்டில் இருந்தது.
4:30க்கு மாநகர ஆணையர் களத்தில் இருக்கிறார். 4:45க்கு டிஜிபிக்கு தகவல் தரப்பட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன. ஒட்டுமொத்த சம்பவ பின்புலத்தையும் ஆராய்ந்து அதிகாலை 4:50க்கு முதல்வர் ஸ்டாலினுக்கு விளக்கம் தரப்படுகிறது.
கடைசியாக டிஜிபி மற்றும் ஏடிஜிபி ஆகியோர் 11 மணிக்கு தடய அறிவியல் மற்றும் நுண்ணறிவுப் பிரிவுடன் சேர்ந்து ஆய்வைத் தொடங்குகிறார்கள். இரவு 10 மணிக்குள் குற்றவாளியைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து விடுகிறார்கள்.
இச்சம்பவத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட மாருதி 800 கார் மற்றும் 10 கைகள் மாறி இறுதியாக இருந்த வாகன உரிமையாளரையே அடையாளம் கண்டுவிடுகிறார்கள். மேலும் காரை ஓட்டி வந்தவரின் வீடும் கண்டறியப்படுகிறது.
இத்தனை விசாரணையும் மாதக் கணக்காக நடத்தப்படவில்லை. ஒரே நாளில் அடுத்தடுத்த நடத்தப்பட்ட சோதனையின் பலனாகக் கிடைக்கின்றன.
இதனிடையே 12 மணிநேரத்தில் நடந்த அடுத்தடுத்த ட்வீஸ்ட் குறித்து உடனடியாக களத்தில் இறங்கி டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் தர முன்வருகிறார்.
சைலேந்திரபாபு தனது சந்திப்பில், "இந்த வழக்கில் உள்ள நபரின் பேரில் முன்பே எந்த வழக்குகளும் இல்லை. எனினும் இவருடன் தொடர்புடைய சில நபர்களை விசாரித்து வருகிறோம். காலை 4 மணி அளவில் நடந்த சம்பவத்தை மிகத் துரிதமாக விசாரித்து 12 மணிநேரத்திற்குள் இந்தக் குற்றவாளி யார்? என்பதைக் கண்டுபிடித்திருக்கிறோம்.
மேலும் உயிரிழந்த நபரின் வீட்டிலிருந்து குண்டு தயாரிப்பதற்கான வேதிப் பொருட்களையும் கண்டுபிடித்துள்ளோம்" என்கிறார்.
மேலும் அவர், "இதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் அந்தச் சம்பவம் நடந்த இடத்தின் அருகே போலீஸ் செக் போஸ்ட் இருந்துள்ளது. ஆகவே குற்றவாளி அஞ்சி தப்பிக்க முயன்றிருக்கலாம். எதிர்காலத்தில் ஏதோ சதி செயலை செய்யத் திட்டமிட்டிருக்கலாம். அந்தக் குற்றவாளி பொறியியல் பட்டதாரி என்று தெரியவந்துள்ளது" என்றும் கூறுகிறார்.
இதனிடையே இந்தச் சம்பவத்திற்காக ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதை அண்ணாமலை அறிந்துதான் பேசுகிறாரா? எனக் கேள்வி எழுப்பினார் அமைச்சர் செந்தில் பாலாஜி. ஆனால் அதற்கு விளக்கம் தர வேண்டிய அண்ணாமலை, 'சாராய வியாபாரிக்குப் பதில் சொல்ல முடியாது. குரங்குபோல் தாவாதீர்கள்' எனப் பத்திரிகையாளர்களைக் கேவலமாக விமர்சிக்கிறார்.
விடிந்தால் தீபாவளி. தமிழ்நாடே ஒரு பண்டிகைக்கான மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளது. அதை அறிந்து எந்தவித பதற்றமும் பரவிவிடாமல் காவல்துறையும் அரசும் செயல்பட்டு வரும்போது அண்ணாமலை மட்டும் 'ஆபத்து ஆபத்து' என ஒரு பதற்றத்தை உருவாக்க முயல்கிறார் என திமுகவைச் சேர்ந்த ராஜீவ்காந்தி முன்வைத்த கேள்விக்கு இதுவரை மவுனம் காத்து வருகிறார் அண்ணாமலை. ஆனால் முதல்வர் மட்டும் இவர் கேட்கும் கேள்விக்குப் பதில் அளிக்கவேண்டும் என்கிறார்.
முதலில் அண்ணாமலை பத்திரிகையாளர்களுக்குப் பதிலளிக்கட்டும் அப்புறம் அவரது கேள்விக்கு யாரும் பதில் அளிப்பார்கள் என்கிறார்கள் திமுகவிற்கு ஆதரவாகக் கருத்து போடும் சமூகவலைத்தள பதிவர்கள்.
சரி, நாம் மீண்டும் கோவை சம்பவத்தின் காவல்துறை நடவடிக்கைக்கு வருவோம். 12 மணிநேரத்திற்குள் சிசிடிவி ஆதாரங்களை வைத்து 5 பேரைக் காவல்துறை கைது செய்கிறது. சம்பவத்தில் இறந்தவர் வீட்டைக் கண்டறிந்து சோதனை செய்து வெடிபொருட்கள் கைப்பற்றப்படுகின்றன. அதன்பொருட்டு 8 நபர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப் படுகின்றன. மேலும் ஒருவர் கைதாகிறார்.
மேலும் இந்த விசாரணை கேரளா வரை விரிவடைகிறது. அடுத்த திருப்பமாகச் சர்வதேச தொடர்புகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இவ்வாறு அணைத்து விசாரணைகளும் 48 மணிநேரத்தில் முடிக்கப்படுகின்றன. மூன்றாம் நாளில் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டவர்கள் மீது உபா பிரிவில் வழக்குப் பதியப்படுகிறது. இறுதியாக என்.ஐ.ஏ விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்கிறார்.
இதைவிட வேகமாக எப்படிச் செயல்பட முடியும்? ஸ்காட்லாந்துக்கு இணையானது நம் காவல்துறை என்ற கருத்து மீண்டும் இன்று உண்மையாகி இருக்கிறது.
ஆனால், பாராட்ட வேண்டிய அண்ணாமலையோ வழக்கம்போல அமைதியாகிவிட்டார். அதற்காகத்தான் காவல்துறை அதிகாரிகளை அழைத்து உழைப்பின் வேர்வை காய்வதற்கு முன்பாகவே சிறப்பு சேர்த்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.