வாட்ஸ் அப்பில் பொய் பரப்புபவராக இருந்தாலும்.. பாஜகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் கோவையில் சொன்ன செய்தி
கோவை: அதிமுகவை சேர்ந்தவராக இருந்தாலும், பாஜகவில் இணைந்து வாட்ஸ் ஆப் மூலமாக பொய் செய்தியை பரப்புபவராக இருந்தாலும் எல்லோருக்கும் எல்லாம் சென்று சேர வேண்டும் என்பது தான் திராவிட ஆட்சி என்று தமிழ்நாடு இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். கலைஞர் பேரன், முதல்வரின் மகன், மாண்புமிகு அமைச்சர் என எவ்வளவோ பெறுமைகள் இருந்தாலும் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளை என அவர் கூறி உள்ளார்.
கோவை கொடிசியா மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இதில் 20 துறைகளின் சார்பில் சுமார் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பத்து பேர் வரவில்லை என்றாலும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

அமைச்சராக முதல் கோவை பயணம்
தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை, உழைப்பில் சென்னைக்கு அடுத்த இடத்தில் உள்ளது. கோவைக்கு எத்தனை முறை வந்தாலும் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பிறகு இதுவே முதல் சுற்று பயணம். இன்று கிறிஸ்துமஸ் திருநாளில் கோவையில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

அதிமுக ஆட்சி
இன்றைய விழாவில் 25,042 பயனாளிகள் 368 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக அரசு நிர்வாகம் செயலற்று கிடந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவைக்கு பொறுப்பு அமைச்சராக முதலமைச்சர் கொடுத்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
கோவை மக்கள் தங்கள் ஊரில் அமைச்சர் இல்லையே என நினைத்திருப்பார்கள். ஆனால் அவரது செயல்பாடுகளை பார்த்து கோவை செந்தில்பாலாஜி என நினைத்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது மாதம் ஒரு முறை கோவைக்கு வருவேன் என வாக்குறுதி கொடுத்திருந்தேன். ஆனால் இதுவரை ஆறு, ஏழு முறை கோவைக்கு வந்துள்ளேன்.

கோரிக்கை மனுக்கள்
இதுவரை 1,57,575 மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. 24 மணி நேரம் கட்டுப்பாடு அறையை திறந்து கோவை மக்களின் குறைகளை தீர்த்து வருகிறார். மின் நுகவோர் சேவை மையமான மின்னகம் மூலம் 13,37,679 மனுக்கள் பெறப்பட்டு அதில் 13,29,565 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மீன்னகம் மூலம் 100 சதவீதம் தீர்வு பெறப்பட்டுள்ளது.

இலவச மின் இணைப்பு
கடந்த பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் 2.20 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

நலத்திட்ட உதவிகள்
கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதியில் ஒரு திமுக எம்எல்ஏவும் இல்லை என நினைத்திருந்தோம். ஆனால் அது பொய் என சொல்லும் அளவிற்கு நிரூபித்து உள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. ரூ.230 கோடி மதிப்பீட்டில் 1,115 முடிவுற்ற பணிகள் துவக்கம், ரூ.800 கோடி மதிப்பில் 5946 புதிய பணிகளுக்கு அடிக்கல், 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

பாஜகவினருக்கும் உதவுவோம்
இதுவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 1600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் கோவைக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிக நலத்திட்டங்களை பெற்ற மாவட்டமாக கோவை திகழ்கிறது. எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. அதிமுகவாக இருக்கலாம், பாஜகவாக இருக்கலாம். பாஜகவில் வாட்ஸ் ஆப் மூலம் பொய் செய்தியை பரப்புபவராக கூட இருக்கலாம். அவர்களுக்கும் எல்லாம் சென்று சேர வேண்டும் என்பது தான் திராவிட ஆட்சி.

நான் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளை
முதல்வரையும் திராவிட மாடல் ஆட்சியையும் மக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள். விளையாட்டு துறை கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். கலைஞர் பேரன், முதல்வரின் மகன், மாண்புமிகு அமைச்சர் என எவ்வளவோ பெறுமைகள் இருந்தாலும் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளை என்பது தான் எனக்கு பெறுமை. உங்கல் வீட்டு செல்லப்பிள்ளையை விட பொறுப்பான செல்லப்பிள்ளையாக இருப்பேன் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications