நாடு திரும்பிய கோத்தபய.. இலங்கை அரசு பங்களாவில் தங்க வைப்பு.. 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு
கொழும்பு: மக்களின் தீவிர போராட்டத்தினால் இலங்கையில் இருந்து வெளியேறி இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளுக்கு சென்ற கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார். தற்போது அவர் அரசு பங்களாவில் இருப்பதாகவும், அங்கு அவருக்கு 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் முன் எப்போதும் இல்லாத வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டதது.
இதனால் இலங்கையில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் மக்கள் கடும் சிரமமடைந்தனர்.
ஒரு வழியாக நள்ளிரவில்.. இலங்கை திரும்பிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச! மாலை அணிவித்து வரவேற்பு
இலங்கையை விட்டு வெளியேறினார்
நாட்டின் இந்த நிலைமைக்கு ஆளும் ராஜபக்சே குடும்பத்தினரே காரணம் என மக்கள் அவர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக அவரது கோட்டையான அரசு பங்களாவில் புகுந்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தியனர். இதனால் தப்பித்தோம் பிழைத்தோம் என்ற கதியில் இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி இலங்கையை விட்டு வெளியேறினார்.
சிங்கப்பூர், தாய்லாந்து
தொடர்ந்து மாலத்தீவு சென்ற அவருக்கு அங்கும் எதிர்ப்பு கிளம்பியதால் சிங்கப்பூருக்கு பறந்தார். அங்கிருந்தபடியே இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இதற்கிடையே சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சேவுக்கு கடந்த மாதம் 11-ம் தேதி வரை தங்கியிருந்தார். தொடர்ந்து அங்கு விசா முடிந்ததால், சிங்கப்பூரில் இருந்து ராணுவ விமானம் மூலம் தாய்லாந்துதுக்கு கோத்தபய ராஜபக்சே புறப்பட்டார்.
அடுத்ததாக அமெரிக்கா
அங்கு தலைநகர் பாங்காக்கில் கோத்தபய ராஜபக்சே தங்கியிருந்தார். தாய்லாந்து நாடும் மனிதாபிமான அடிப்படையில் தான் கோத்தபய ராஜபக்சேவுக்கு நாட்டில் தங்குவதற்கு அனுமதித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் பாங்காங்கில் உள்ள சொகுசு ஓட்டலில் கோத்தபய ராஜபக்சே ஓட்டலை விட்டு எக்காரணம் கொண்டும் வெளியே வரகூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்தபடி அமெரிக்கா குடியேற விரும்பினார்.
உற்சாக வரவேற்பு
எனினும் அவர் இலங்கை திரும்பப்போவதாக அடிக்கடி தகவல் வெளிவந்து இருந்தன. இந்த நிலையில் நேற்று கோத்தபய ராஜபக்சே விமானம் மூலம் இலங்கை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அங்கு அவருக்கு இலங்கையில் தற்போது உள்ள அமைச்சர்கள் பலர் நேரில் சென்று வரவேற்றனர். கிட்டத்தட்ட 51 நாட்கள் கழித்து இலங்கை திரும்பியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசு பங்களாவில் பலத்த பாதுகாப்புடன்
இதைத்தொடர்ந்து கோத்தபய ராஜபக்சேவுக்கு பலத்த போலீஸ் பாதுக்காப்புடன் சொகுசு கார் மூலம் அழைத்து வரப்பட்டார். கொழும்புவின் விஜேராம மாவத் அருகே உள்ள அரசு பங்களா, கோத்தபய ராஜபக்சே தங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பங்களாவில் அவரது சகோதரரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்சே வசித்தார். தற்போது இந்த பங்களாவில் தான்கோத்தபய ராஜபக்சே தங்கியிருக்கிறார். இதனால் பங்களாவை சுற்றிலும் 24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.