பணிப் பெண்ணிடம் அத்துமீறல்.. ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பயணி - 'பரபர' சம்பவம்
டெல்லி: ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் விமானப் பணிப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறி பயணி ஒருவர் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக விமானங்களில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தித் தவறிழைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தொடரும் அநாகரீக செயல்கள்
கடந்த சில மாதங்களாகவே விமானங்களில் சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, கடந்த நவம்பர் மாதம் நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணி மீது சங்கர் மிஸ்ரா என்பவர் சிறுநீர் கழித்தார். இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மற்றொரு சம்பவத்தில், இண்டிகோ விமானத்தில் நடு வானில் பயணிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதுபோல பல சம்பவங்களை உதாரணமாகக் கூற முடியும். அந்த வகையில், தற்போது மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்திருக்கிறது.
ஸ்பைஸ்ஜெட் விமானத்தில்..
டெல்லியில் இருந்து ஹைதராபாத்துக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. பயணிகள் அனைவரும் அமர்ந்துவிட்ட நிலையில், விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது விமானப் பணிப்பெண்ணைத் தவறான இடத்தில் ஒரு முதியவர் தொட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த விமானப் பணிப்பெண் சம்பந்தப்பட நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இறக்கிவிடப்பட்டார்
பதிலுக்கு அந்த நபரும் அப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனது கை வேண்டுமென்றே படவில்லை என்றும், இடம் குறுகலாக இருந்ததால் கை தெரியாமல் பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார். வாக்குவாதம் நீடிக்கவே, மற்ற பயணிகளும், விமான ஊழியர்களும் அங்கு வந்து அவர்களை விலக்கிவிட்டனர். இதையடுத்து, அந்த நபர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார். இருந்தபோதிலும், அவரையும், அவருடன் வந்த மற்றொரு பயணியையும் விமான ஊழியர்கள் இறக்கிவிட்டனர்.
ஸ்பைஸ்ஜெட் விளக்கம்
இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "டெல்லி - ஹைதராபாத் விமானத்தில் விமானக் குழு ஊழியர்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்தும் வகையிலும், தவறாகவும் ஒரு பயணி நடந்துகொண்டார். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்துப் பொறுப்பு விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அவர் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.