வேறவழியே இல்லை... இந்தியாவை போல விமான துறையை தனியாருக்கு விற்றுத்தான் ஆகனுமே.. ரணில் பிடிவாதம்!
கொழும்பு: இலங்கை விமான சேவையின் நஷ்டத்தை ஈடுகட்ட அத்துறையை தனியார்மயமக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்கே இலங்கை மக்களுக்கு நேற்று ஆற்றிய உரை:
கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டேன். அந்தப் பதவியை நான் கேட்கவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். நான் அரசியல் தலைவராக மட்டுமின்றி இலவசக் கல்வியை அனுபவித்து கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டத்துறையில் பட்டம் பெற்று உயர்ந்த தேசியத் தலைவர் என்ற வகையிலே இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. 2022 ஆரம்பத்தில் கடந்த அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் 2300 பில்லியன் ரூபாய்கள் வருமானமாக உள்ளன என காட்டப்பட்டாலும் இந்த வருடத்திற்கான உண்மையான வருமான கணிப்பு 1600 பில்லியன் ரூபாய்களாகவே உள்ளன.. 2022 ஆம் ஆண்டிற்கான அரசின் செலவு 3300 பில்லியன் ரூபாய்கள். எவ்வாறாயினும் கடந்த அரசில் வட்டி விகிதம் அதிகரித்ததன் காரணமாக 2022 ஆம் ஆண்டிற்கான அரசின் மொத்த செலவு 4000 பில்லியன் ரூபாய்களாகும். எரிவாயுவை கப்பலில் ஏற்ற தேவையான 5 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் இந்த நேரத்தில் தேடிக்கொடுக்க முடியாதுள்ளது.
இப்போது நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது. இலங்கைக்கு வந்த டீசல் கப்பலால் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும். இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் மே 19 மற்றும் ஜூன் 01ல் மேலும் இரண்டு டீசல் கப்பல்களும் மே 18, மே 29 இரண்டு பெட்ரோல் கப்பல்கள் வருகை தர உள்ளன. இதனால் நாள்தோறும் மின்வெட்டு இன்னும் சில நாட்களில் 15 மணிநேரமாக மாறும்.
இலங்கையில் மருந்துகளுக்கானத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதய நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், அறுவை சிகிச்சைக்குத் தேவையான சிகிச்சை உபகரணங்கள் உட்பட பல மருத்துவ மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. மொத்தம் 14 அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளன. இதய நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து, மற்றும் நாய்க்கடி எதிர்ப்பு மருந்து ஆகியவற்றை தற்போது வழங்க முடியாத நிலை உள்ளது.
2020- 2021ல் மட்டும் ஸ்ரீலங்கன் விமான சேவை 45 பில்லியன் ரூபாய்கள் நஷ்டத்தை எதிர்கொண்டிருக்கிறது.2021-ம் ஆண்டு மார்ச் 31-ல் மொத்த நஷ்டம் 372 பில்லியன்களாக உய்ர்ந்தது. இலங்கை விமான சேவையை நாம் தனியார் மயப்படுத்தினாலும் இந்த நஷ்டத்தை நாமே ஏற்க நேரிடும். இந்த நஷ்டத்தை வாழ்கையில் ஒருமுறையாவது விமானத்தில் பயணிக்காத இந்த நாட்டின் ஏழை எளிய மக்களும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். குறுகிய காலத்திற்கு நாம் இதனை விட மோசமான காலத்ததை எதிர்கொள்ள போகிறோம்.
எதிர்வரும் சில மாதங்களுக்கு நீங்களும் நானும் வாழ்க்கையில் மோசமான காலக்கட்டத்தை கடக்க நேரும். அதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் தயாராக இருக்க வேண்டும்.
மண்ணெண்ணெய், எரிவாயு, எரிபொருள் வரிசை இல்லாத நாடு, மின்சாரம் துண்டிக்கப்படாத நாடு , விவசாயத்தை சுதந்திரமாக மேற்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ள நாடு , இளைஞர்களின் எதிர்வாழ்வு பாதுகாக்கப்பட்ட நாடு, மனித வளம் போராட்டக் களத்தில் மற்றும் வரிசையில் வீணடிக்கத் தேவை இல்லாத நாடு, எல்லோரும் சுதந்திரமாக வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லக் கூடிய நாடு , மற்றும் மூன்று வேளையும் உணவு உண்ணக் கூடிய நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்.
நான் பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமான சவால் மிகுந்தது. மிகவும் ஆழமானது. நாம் நடக்கும் பாலங்கள் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளன. கைப்பிடி இல்லை. என்னுடைய கால்களில் கழற்ற முடியாத பாதணிகள் போடப்பட்டுள்ளன. அதன் அடியில் கூர்மையான இரும்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஒரு தனிமனிதன் , ஒரு குடும்பம், அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாப்பது என்றில்லாமல் முழு நாட்டையும் மக்களையும் காப்பாற்றுதே, இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுவதே என் பணி. என் உயிரை பணயம் வைத்து இந்த சவாலை நான் எதிர்கொள்வேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள். நான் எனது கடமையை நாட்டிற்காக செய்து முடிப்பேன். அது நான் உங்களுக்கு அளிக்கும் உறுதியாகும். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.