அன்று அனுமன் வைத்த தீ... இன்று மக்கள் வைத்த தீ... பற்றி எரியும் இலங்கை - தமிழர்கள் சாபம் விடுமா?
பசியோடு கஞ்சிக்கு வரிசையில் நின்ற தமிழக மக்கள் மீது கொத்து கொத்தாக குண்டுகளை வீசி கொன்றவர்கள் இன்று அதற்கான பலனை அறுவடை செய்கின்றனர்.
கொழும்பு: பல நகரங்களிலும் வன்முறை பரவியதால் பற்றி எரிகிறது இலங்கை. ராமாயணத்தில் அன்று ராவண ராஜ்ஜியத்திற்கு எதிராக அனுமன் வைத்த நெருப்பில் சாம்பலானது போல இப்பொழுதும் பல நகரங்கள் பற்றி எரிகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
Recommended Video
13 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல ஒரு மே மாதத்தில்தான் இலங்கையில் உணவுக்கு கூட வழியின்றி போர் முனையில் சிக்கியிருந்த அப்பாவி தமிழக மக்கள் கொத்து கொத்தாக மஹிந்த ராஜபக்சே அரசால் கொல்லப்பட்டனர். உலக தமிழர்களின் சாபம் இன்றைக்கு மஹிந்த ராஜபக்சேவை திருப்பி தாக்கியுள்ளது.
எந்த நாட்டு மக்களால் பதவிக்கு வந்தாரோ அதே நாட்டு மக்களால் விரட்டப்பட்டுள்ளார். வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. ராமாயண காலத்தில் நிகழ்ந்தது போல ஒரு தீக்கிரை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வன்முறை கலவரம்
இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலால், நாடு முழுவதும் கலவரம் வெடித்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஆளும் கட்சி எம்பி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் அந்நிய செலாவணி பற்றாக்குறையால், வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததால், அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். குறிப்பாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடக்கின்றன.
ஆளும் இலங்கை பொதுஜன பெராமுனா கட்சியிலும் மஹிந்த ராஜபக்சேக்கு எதிர்ப்புகள் அதிகரித்தன.
மஹிந்த ராஜபக்சே
மஹிந்த ராஜபக்சே பதவி விலகுவார் என இலங்கை மக்கள் நேற்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், மகிந்தாவுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள், கட்சியினர் பேருந்துகள் மூலமும் பேரணியாகவும் குவிந்தனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் முன்பாக குவிந்த சுமார் 3000 ஆதரவாளர்கள் முன்பாக பேசிய மஹிந்த ராஜபக்சே, ‘‘எதிர்ப்புகள், போராட்டங்களை பார்த்து பழகிவிட்டேன். எதுவும் என்னை தடுக்க முடியாது. எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் அளவுக்கு நான் அனுபவம் வாய்ந்தவன். இலங்கை மக்களுக்கு எந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்'' என்று பேசினார்.
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்
இதைக் கேட்டு உற்சாகமடைந்த அவரது ஆதரவாளர்கள், அவர்களுடன் வந்திருந்த குண்டர்கள் கம்பு, இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை என ஆயுதங்களுடன் சென்று பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை ஒட்டியும், காலி முகத்திடலிலும் போராட்டம் நடத்தி வந்த மக்களை நடுரோட்டில் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் 78 பேர் படுகாயமடைந்தனர்.
போர்க்களமாக மாறிய இலங்கை
திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், மஹிந்தா ஆதரவாளர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக, அப்பகுதியே போர்க்களமாக மாறியது. மகிந்தா ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள், அவர்கள் வந்த பஸ்சையும் ஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்தெறிந்தனர். சம்பவ இடத்திற்கு ராணுவம் குவிக்கப்பட்டு, தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
நாடு முழுவதும் ஊரடங்கு
வன்முறை பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும், வன்முறையால் எந்த வெற்றியும் கிடைக்காது என்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி கேட்டுக் கொண்டனர்.
மஹிந்த ராஜபக்சே ராஜினாமா
வன்முறையால் நிலைமை விபரீதமான நிலையில், பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபயவிடம் வழங்கினார். இதன் மூலம் மக்களின் ஒருமாத கோரிக்கை நிறைவேறி உள்ளது. இதே போல அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகும் வரை போராட்டங்கள் தொடரும் என பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
போராட்டம் தொடரும்
மஹிந்த ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து, அவரது தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கிடையே, மகிந்த ராஜபக்சே மற்றும் ஆளுங்கட்சி எம்பிக்கள், அமைச்சர்கள், மேயர் உள்ளிட்ட பலரது வீடுகளை போராட்டகாரர்கள் சூறையாடி தீ வைத்ததால், இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.
பற்றி எரியும் இலங்கை
மஹிந்தா ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து, குருணாகல் நகர பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் கொழும்புவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்டு, மக்கள் போராட்டம் நடத்தினர். இதில், குருணாகலில் உள்ள மகிந்த வீட்டை தீவைத்து எரித்தனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய மக்கள், உள்ளே செல்ல பலமுறை முயன்றனர். பொதுஜன பெரமுனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த்தின் வீட்டை சிலர் தீ வைத்து எரித்தனர்.
சூறையாடப்பட்ட வீடுகள்
புத்தளம் பகுதியில் உள்ள எம்பியின் வீடு முழுமையாக எரிந்து நாசமானது. குருணாகல் நகர மேயர் வீடும் எரிக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இதே போல பல அமைச்சர்களின் வீடுகள், ஆளும்கட்சி எம்பிக்கள் வீடுகளின் மீதும் பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி தீ வைத்துள்ளனர். வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா, பிரதமர் இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு சென்றார். அப்போது மஹிந்தா ஆதரவாளர்கள் அவர் மீதும் தாக்குதல் நடத்தினர். உடனடியாக பாதுகாவலர்கள் அவரை மீட்டு அங்கிருந்து பத்திரமாக அழைத்து வந்தனர்.
கைது செய்ய வலியுறுத்தல்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அளித்த பேட்டியில், ‘‘மஹிந்த ஆதரவாளர்கள் திட்டமிட்டே வன்முறையை உருவாக்கி உள்ளனர். பதவி போவதால் அதற்கு காரணமான பொதுமக்களை பலிகடாவாக்க துணிந்துள்ளனர். அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அசாதாரண சூழ்நிலை
கலவரத்தை கட்டுப்படுத்த, வன்முறையில் ஈடுபடும் அனைவரையும் கைது செய்ய அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். கட்சி பாரபட்சமின்றி, வன்முறை செய்யும் எவரையும் போலீசார் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் நாட்டில் அமைதியை நிலைநாட்ட முப்படைகளின் வீரர்கள் அனைவரது விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களும் ராணுவத்திற்கு உதவ வேண்டுமென பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
13 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்
கடந்த 2009 ஆண்டு இது போல ஒரு மே மாதத்தில்தான் அப்பாவி தமிழக மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தார் மஹிந்த ராஜபக்சே. அன்று விதைத்த வினையை இன்றைக்கு அறுவடை செய்கிறார். பாவத்தின் சம்பளத்தை பெற்றுத்தானே ஆக வேண்டும். இப்பொழுதெல்லாம் தண்டனைக்காக அடுத்த பிறவி வரை காத்திருக்க வேண்டியதில்லை என்பதை ராஜபச்சே சகோதரர்கள் உணர்ந்திருப்பார்கள்.