கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி
கொழும்பு: இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில், இலங்கைக்கு நிதி அளித்து உதவ முடியாது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
அன்னிய செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால், விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு சென்றது.
கோத்தபய தப்பி ஓடவில்லை. . விரைவில் வந்துவிடுவார். . இலங்கை அமைச்சர் பேச்சு!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி
கடுமையான நிதி தள்ளாட்டத்தில் சிக்கிய இலங்கை வெளிநாடுகளில் வாங்கிய கடனைக் கட்ட இயலாது என வெளிப்படையாக அறிவித்தது. இப்படி கடும் நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கையில், மக்கள் கிளர்ச்சியும் வெடித்தது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கும் ஆளும் ராஜபக்சே சகோதரர்களே காரணம் என கூறி அவர்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. மக்களின் போராட்டங்களால் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே இருவரும் தத்தமது பதவிகளில் இருந்து விலகினர். இதையடுத்து, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக்கொண்டார்.
நிதி உதவி அளிக்கப்போவது இல்லை
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய அரசு பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், இலங்கைக்கு புதிய கடன் உதவி அளிக்கும் எந்த திட்டமும் இல்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீடித்த பொருளாதாரத்திற்கு தேவையான ஒரு விரிவான கொள்கையை வகுக்கும் வரை இலங்கைக்கு எந்த நிதி உதவியையும் அளிக்கப்போவது இல்லை. பொருளாதார நிலைத்தன்மையை கவனத்தில் கொண்டு ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தம் செய்ய வேண்டும். தற்போதைய நெருக்கடிக்கு காரணமான கட்டமைப்புக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
பற்றாக்குறையை போக்க
அதேபோல், எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவாக மீண்டு வருவதற்கான திட்டமும் வகுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. அதேவேளையில், இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியும் இதனால், மக்கள் மீது ஏற்பட்டுள்ள தாக்கமும் கவலை அளிப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேலும் கூறுகையில், மருந்துகள், சமையல் எரிவாயு, உரம், பள்ளி குழந்தைகளுக்கான உணவு, ஏழைகளுக்கான பண பரிமாற்றம், போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை போக்க உதவுவதாக தெரிவித்துள்ளது.
160 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
மேலும் கூறுகையில், ''இலங்கை தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அந்நாட்டிற்கு இதுவரை 160 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான மருந்து பொருட்கள், பள்ளி மாணவர்களுக்கான உணவு ஆகியவைகளுக்கான நிதி தேவையானவர்களை சென்றடைவதை மேற்பார்வையிடப்படுகிறது" என உலக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனக்கு கடன் வழங்கிய நாடுகளிடம் மறு சீரமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்த 2 நாட்களில் உலக வங்கியின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.