வாவ்.. 13 ஆண்டுகளுக்குப் பிறகு.. "நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது இலங்கை வானொலி.." மீண்டு'ம்' வந்தது!
கொழும்பு: 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நேயர்களுக்காக கொழும்பு சர்வதேச வானொலி ஒலிபரப்பை தொடங்கி இருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிட்டு தமிழ் வானொலி ஆதரவாளர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறது இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம்.
1922-ல் லண்டனில் முதன்முதலாக பிபிசி வானொலி நிறுவப்பட்டது. அதையடுத்து 1925-ல் 'சிலோன் ரேடியோ' என்றபெயரில் நிறுவப்பட்ட இலங்கை ஒலி பரப்புக் கூட்டு ஸ்தாபனம் நிறுவப்பட்டது. இந்த வானொலி தனது வர்த்தக சேவை பிரிவை 1950ல் தொடங்கி, இந்திய துணைக் கண்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தமிழர்கள் அதிகமாக விரும்பி கேட்ட இலங்கை வானொலி மீண்டும் தனது சேவையை இந்தியாவுக்கு வழங்குகிறது. புகழ்பெற்ற இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலப் பாடல்களின் இசைத் தட்டுக்களைக் கொண்டிருக்கிறது.

சேவை நிறுத்தம்
இலங்கை உள்நாட்டுப் போரின்போது, கடந்த 31.05.2008 அன்று இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் தமிழக நேயர்களுக்கான ஒலிபரப்பு சேவையை நிறுத்திக் கொண்டது. 13 ஆண்டுகளாக மீண்டும் இந்த சேவையைத் தொடர வேண்டும் என இலங்கை வானொலிக்கு கோரிக்கைகள் சென்றது. இதையடுத்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத் தலைவர் ஹட்சன் சமரசிங்கே, இந்தியாவில் வானொலி சேவையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் நடப்பதாக கடந்த ஆண்டு தெரிவித்தார். அதையடுத்து தமிழ் மக்களுக்காக சேவை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டது கொழும்பு வானொலி நிலையம்.

மீண்டும் சேவை
இந்நிலையில் நேற்று (20.01.2022) இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் தமிழக நேயர்களுக்காக கொழும்பு சர்வதேச வானொலி தனது ஒலிபரப்பை 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியிருக்கிறது. இந்த வானொலியை மத்திய அலைவரிசையில் 873 கி.ஹெர்ட்ஸில் கேட்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

நேரலை
தமிழக நேயர்களின் இதில் நேரலையிலும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானொலிக்கான வரவேற்பை பொறுத்து சேவை விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவைகளின் பொறுப்பாளராக வீரசிங்கம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழர்கள் வாழ்க்கையில் கலந்த ரேடியோ
இலங்கை வானொலி 1980, 90களில் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் கலந்தது. அப்துல் ஹமீது குரலை இந்த வானொலியில்தான் தமிழர்கள் முதலில் கேட்டனர். பிறகுதான், லலிதாவின் பாட்டுக்கு பாட்டு என அவர் தமிழ் சாட்டிலைட் தொலைக்காட்சியில் காலடி எடுத்து வைத்தார். இலங்கை வானொலியில் பேசுவோரின் தமிழை கேட்பது இன்பத் தேன் காதில் பாய்வது போன்ற உணர்வை தருவது. மீண்டும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் தனது ஒலிபரப்பை தொடங்கியுள்ளது, ரெட்ரோ ரசிகர்களுக்கு ரெடிமேடாக கிடைத்த இனிப்பு மாதிரி ஸ்வீட் செய்தி என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது.












Click it and Unblock the Notifications