இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்ல முயன்றதா இந்திய உளவு அமைப்பு 'ரா'? திடீர் பரபரப்பு
Recommended Video
கொழும்பு: இந்திய உளவு அமைப்பான 'ரா' (ஆய்வு மற்றும் பகுப்பாய்வு பிரிவு-RAW) தன்னை கொல்ல முயற்சி செய்ததாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அமைச்சரவை சகாக்களுடன் தகவல் பரிமாறிக் கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அதிபர் நடத்தும் வாராந்திர அமைச்சரவை கூட்டத்தின்போது, தனது சகாக்களுடன் இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதாக 'தி இந்து' ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. அமைச்சரவையில் உடனிருந்த ஒருவர் இந்த தகவலை தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி இந்திய-இலங்கை வெளியுறவு மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரா முயற்சி
நாளிதழ் செய்தியின்படி, அமைச்சரவையில் தனது சகாக்களிடம் சிறிசேனா கூறுகையில், "ரா அமைப்பு என்னை கொல்ல முயன்றது. ஆனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இதுபற்றி தெரியாது என்று நினைக்கிறேன். சிஐஏ (அமெரிக்க உளவு அமைப்பு) நடவடிக்கைகள் அனைத்தும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு தெரியாது என்பதை போன்றதுதான் இதுவும்" என்று கூறினாராம். இதைக் கேட்டதும், நாங்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனோம் என்று நாளிதழிடம் தகவல் தெரிவித்த அந்த நபர் கூறினாராம்.
உறுதியான செய்தி என்கிறது
மேலும் அந்த நாளிதழ் கூறுகையில், செவ்வாய்க்கிழமை, மாலையில், இந்த தகவல் தொடர்பாக, ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அரசுதுறையினர் மற்றும் அரசியல் கட்சியினர் பலர் மத்தியில் தங்கள் நிருபர் விசாரித்ததாகவும், அவர்களும் இந்த தகவல்களை உறுதி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், அமைச்சரவை கூட்டத்தில், கொழும்பு துறைமுகத்தை, இந்திய உதவியுடன் மேம்படுத்தும் திட்டத்திற்கு சிறிசேனா எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதுதொடர்பாக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அந்த நாளிதழ் மேலும் தெரிவிக்கிறது.
ரா பங்களிப்பு
'ரா' மீது பிற நாட்டு தலைவர்கள் குற்றம்சாட்டுவது இது முதல் முறை கிடையாது. 2015ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, தனது தோல்விக்கு, இந்திய உளவு அமைப்பு முக்கிய பங்காற்றியது என முன்னாள் அதிபர் ராஜபக்சே குற்றம்சாட்டியிருந்தார். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தை பிரித்ததிலும் 'ரா' அமைப்பு முக்கிய பங்காற்றியது. ஆப்கன் தீவிரவாதிகளை தூண்டிவிட்டு, தங்கள் நாட்டில் குண்டு வெடிப்புகளை 'ரா' நிகழ்த்தி வருவதாக பாகிஸ்தான் அவ்வப்போது குற்றம்சாட்டி வருகிறது.
திறமையான உளவாளிகள்
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த மாதிரி நடவடிக்கைகளையும் 'ரா' அமைப்பு செய்யும் என்ற பேச்சு உண்டு. அமெரிக்காவின் சிஐஏ, இஸ்ரேலின் மொசாட் போன்ற திறமைமிக்க உலகின் ஒரு சில உளவு அமைப்புகளில் இந்தியாவின் 'ரா' ஒன்று என்கிறார்கள். இன்னும் சில நாட்களில் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வருகை தந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ள நிலையில், சிறிசேனா பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.
பேசினோம், ஆனால் பேசல
இதனிடையே, 'தி இந்து' நாளிதழ் செய்தியை, இலங்கை அதிபர் மாளிகை மறுத்துள்ளது. இலங்கை அதிபரின், ஆலோசகரும், செயலாளருமான ஷிரல் லக்திலகா இதுகுறித்து கூறுகையில், சிறிசேனா, பொதுவாகத்தான் பேசினாரே தவிர, ரா பற்றி இல்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உளவு அமைப்புகள், பிற நாடுகளின் தலைவர்களை கொலை செய்ய முயன்றது குறித்து பேசினார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.