ராஜபக்சே குடும்பத்துக்கு ஒவ்வொரு 9-ந் தேதியும் வேட்டு! இனி கோத்தபாய பதவி கோவிந்தா?இலங்கை சுவாரசியம்!
கொழும்பு: இலங்கையில் மகிந்த ராஜபக்சே குடும்பத்துக்கு ஒவ்வொரு மாதமும் 9-ந் தேதி போதாத காலமாக இருக்கிறது; ஆகையால் வரும் ஜூலை 9-ந் தேதி ஜனாதிபதி பதவியில் கோத்தபாய ராஜபக்சே நீடிப்பாரா? என்கிற சுவாரசிய விவாதம் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
யானை தந்தங்கள் வைத்திருந்த வழக்கு; மோகன்லால் மீது பாயும் நடவடிக்கை; நீதிமன்றம் உத்தரவு
இலங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே; ஜனாதிபதியாக இருக்கும் கோத்தபாய ராஜபக்சேக்களுக்கு எதிராக கொழும்பு காலிமுகத் திடலில் மக்கள் புரட்சி மையம் கொண்ட நாள் ஏப்ரல் 9. கோத்தா கோ கம என்ற பெயரில் ஒரு மாதிரி கிராமம் கட்டமைக்கப்பட்டு கோத்தபாயவுக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கியது.
மே 9-ம் மகிந்தவும்
இந்த கிளர்ச்சி உச்சமடைந்த நாள் மே 9. கடந்த மே மாதம் 9-ந் தேதியன்று மக்கள் புரட்சியை எதிர்கொள்ள முடியாத நிலையில் பதவி விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார் மகிந்த ராஜபக்சே. தாம் பதவி விலகுவதற்கு முன்னதாக போராடும் மக்களை அழித்தொழிப்பது என்ற முடிவுடன் குண்டர் குழுக்களை களமிறக்கினார் ராஜபக்சே. ஆனால் மகிந்த ராஜபக்சேவின் வாழ்க்கையில் மே 9-ந் தேதி மறக்கவே முடியாத தரித்திர நாளாக உருமாறும் என்பது யாரும் கணிக்காத ஒன்று!
தப்பி ஓடிய மகிந்த ராஜபக்சே
கொழும்பு காலி முகத் திடலில் போராடிய பொதுமக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது மகிந்த ராஜபக்சேவின் கூலிப் பட்டாளம். ஆனால் மக்கள் சக்தி மகத்தானது என வரலாறு மீண்டும் நிரூபித்தது. தங்கள் மீது தாக்குதல் நடத்திய மகிந்தவின் குண்டர் படையை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்தனர் பொதுமக்கள். இதனால் மகிந்தவின் குண்டர்கள் ஏரிக்குள் தப்பி ஓடி உயிர் பிழைத்தனர். ஆனாலும் அடங்காத மக்கள் கோபம் ஒட்டுமொத்த இலங்கையையும் பற்றி எரிய வைத்தது. மகிந்த ராஜபக்சேக்களின் ஆதரவு அரசியல்வாதிகளின் வீடுகள், வர்த்தக நிலையங்களில் தொடங்கிய இந்த தீக்கிரை வேட்டை ராஜபக்சேக்களின் வீடுகளுக்கும் பரவியது. ராஜபக்சேக்களின் தந்தையின் சிலை வீழ்த்தப்பட்டது; ராஜபக்சேக்களின் பெற்றோரின் கல்லறைகள் தகர்க்கப்பட்டன. இதனால் மகிந்த ராஜபக்சே உயிருக்கு அஞ்சி கொழும்பைவிட்டு தப்பி ஓடிய நாள் மே 9. தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த கையோடு கொழும்பில் இருந்து தப்பி திருகோணமலையில் கடற்படை பாதுகாப்பில் பதுங்கினார் மகிந்த ராஜபக்சே. அவர் மாலத்தீவுக்குப் போய் இந்திய தொழிலதிபரின் மாளிகையில் பதுங்கியதாகவும் சொல்லப்பட்டது.
பசில் ராஜபக்சே
இப்படி 30 நாட்கள் கடந்த நிலையில் ஜூன் 9-ந் தேதி வந்தது. மகிந்த ராஜபக்சேவுக்கு பதில் தாம் பிரதமராக்கப்படுவோம் என கனவு கண்டிருந்த அவரது சகோதரர் பசில் ராஜபக்சே, இலவு காத்த கிளியாகிப் போன நிலையில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். பசில் ராஜப்கசேவின் மனைவி அமெரிக்காவுக்கு தப்பி ஓடிவிட்டார். பசில் ராஜபக்சேவின் அரசியல் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி கிடக்கிறது.
ஜூலை 9-ல் என்ன?
இந்த நிலையில் ஜூலை 9-ந் தேதி ராஜபக்சே குடும்பத்தில் என்ன நடக்கும்? என்பது சுவாரசியமான விவாதமாகி இருக்கிறது. தற்போதைய நிலையில் சர்வதேசத்திடம் கையேந்தி கொண்டிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்கே. அவர் மீதான மதிப்புகளால் ஏதேனும் நிதி உதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதை செரித்துக் கொள்ள முடியாத கோத்தபாய ராஜபக்சே தாம் ஜனாதிபதி என்ற அதிகாரத்தில் ரணிலுக்கும் குடைச்சல் கொடுப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலைமை நீடித்தால் ஜூலை 9-ந் தேதி பிறக்கும் போது ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சேவும் விலகி உயிருக்கு அஞ்சி தப்பி ஓடும் சூழல்தான் உருவாகும் என்கின்றனர் கொழும்பு அரசியல் பார்வையாளர்கள்.