நடிகர் வடிவேலு செய்வாரே.. டிட்டோ.. தண்ணீரை பீய்ச்சியடித்த போலீஸ்.. ஷாம்பூ போட்டு குளித்த மாணவர்கள்
போராட்டத்தில் ஷாம்பு போட்டு குளித்த இலங்கை மாணவர்களின் வீடியோ வைரலாகிறது
கொழும்பு: ரணில் விக்கிரமசிங்கே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த போராட்ட வீடியோ இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.
அளவுக்கு அதிகமான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி உள்ளது.. ஆட்சி மாற்றம் வரை பொருளாதார நெருக்கடி கொண்டுபோய் விட்டுவிட்டது..
கோட்டபய ராஜபக்ச அதிபர் பதவிவிலகிய நிலையில், இடைக்கால புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பில் உள்ளார்.. ஆனாலும் அங்கு நிலைமை சீராகவில்லை. போராட்டங்களும் முடிவுக்கு வரவில்லை..
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே வருகைக்கு எதிர்ப்பு- யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் போராட்டம்!
கண்ணீர் வறுமை
ஒருவேளை சாப்பாட்டுக்குகூட வழியில்லாத நிலையில், பொதுமக்களே கொதித்தெழுந்து வீதிகளில் இறங்கி போராடியதை உலக நாடுகளே கவலையுடன் பார்த்தன.. அவசரநிலை கொண்டு வரப்பட்டு போராட்டத்தை ஒடுக்கினாலும், வறுமையும், கண்ணீரும், அம்மக்களுக்கு குறைந்ததாக தெரியவில்லை.. இப்படிப்பட்ட சூழலில்தான், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட சிவில் அமைப்புகளால் கொழும்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தினால் போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டது..
ரணில் வருகை
இந்நிலையில் வடக்கு பகுதியின் யாழ்ப்பாணத்தில் பொங்கல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே வருகை தந்திருந்தார்.. அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக யாழ்ப்பாணம் வந்திருந்தார் அவர்.. தமிழ் கலாச்சார முறைப்படி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டும், இந்து சமய முறைப்படி வரவேற்பும் அளிக்கப்பட்டது... ஆனால், ரணில் தங்கள் பகுதிக்கு அதிபர் வந்து இருப்பதை கேள்விப்பட்ட, ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான தமிழர்கள் திடீரென அங்கு குவிந்துவிட்டனர்.. ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கள் நிலங்களை மறுபடியும் வழங்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
தள்ளுமுள்ளு
இதுதொடர்பாக அதிபரிடம் வலியுறுத்துவதற்காக, பொங்கல் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் அவர்கள் நுழைய முயன்றனர்.. ஆனால், அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்திவிட்டனர்.. இதையடுத்து, இருதரப்புக்கும் தள்ளுமுள்ளுவும், அதைதொடர்ந்து பரபரப்பும் ஏற்பட்டது. போராட்டத்தினர் மீது தண்ணீரை பாய்ச்சி ஒடுக்க முயன்றநிலையில், ஈழத் தமிழர்கள் அசராமல் நின்று, தொடர்ந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.. இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
பீய்ச்சிய தண்ணீர்
அந்த வீடியோவில், யாழ்ப்பாணத்துக்கு ரணில் வந்திருந்தபோது, தமிழர் பகுதியில் இருந்து இலங்கை ராணுவம் வெளியே வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.. அப்போது போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறை, தண்ணீர் பீரங்கி வாகனங்களை கொண்டு வந்து நிறுத்துகிறது.. ஆனாலும் மாணவர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்புகிறார்கள்.. இதனால், வேறு வழியின்றி தண்ணீர் பீய்ச்சியடித்து அவர்களை விரட்ட போலீஸார் முயல்கிறது.. இதில் மாணவர்களில் பலர் கலைந்து தெறித்து ஓடுகிறார்கள்..
ஷாம்பு குளியல்
ஆனால், போன வேகத்திலேயே அவர்கள் திரும்பி வருகிறார்கள்.. சிலர் தலையில் ஷாம்பூ தேய்த்து, குளிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.. தலையில் ஷாம்புவுடன் அடுத்த சுற்று தண்ணீர் பீய்ச்சலுக்கு உற்சாகமாக ஷாம்பு குளியல் செய்கிறார்கள்.. சிலர் குளிருக்கு ஈடுகொடுக்க குளித்துக் கொண்டே டான்ஸ் ஆடுகிறார்கள்.. மாணவர்களின் இந்த திடீர் செயலால் போலீசார் விக்கித்து நிற்கிறார்கள்.. ஆனாலும் அவர்களை போலீசார் மென்மையாகவே கையாள்கிறார்கள்.. இந்த வீடியோதான் இணையத்தில் ஷேர் ஆகிறது.. முன்னதாக போராட்ட மாணவர்களை போலீஸார் வளைத்தபோது, சாணம் கரைத்த நீரை போலீஸார் மீது தெளித்து எதிர்ப்பை தெரிவித்திருந்தனர் என்றாலும், பொங்கலை முன்னிட்டு வைரலான தமிழர்களின் பதிவுகளில் மாணவர்களின் இந்த ஷாம்பூ குளியல் வீடியோவும் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.