"கடவுளின் கோபம்.." டைமிங்காக ட்வீட் போட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் மேத்யூஸ்
கொழும்பு: 2019 ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கை தேவாலயங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டபோது நடந்தது என்ன என்று இலங்கை கிரிக்கெட் வீரர் ஆஞ்செலோ மேத்தியூஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இலங்கை கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. தற்போது இது அரசியல் நெருக்கடியாகவும் உருவெடுத்து இருக்கிறது.
உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

மோசமான நிலையில் இலங்கை
இலங்கையில் பொருளாதார சூழல் மோசமடைந்து இருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததுடன் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. உணவு மற்றும் எரிபொருட்கள் கிடைக்கவில்லை. பொருளாதார மந்தநிலையால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஏராளமானோருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளில் எரிபொருட்கள் கிடைக்காததால் போக்குவரத்தும் முடங்கி இருக்கிறது. இதனால் மக்கள் வெளியில் வர முடியாமல் வீடுகளுக்குள் அடைபட்டு கிடக்கின்றனர். மின் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.

வலுக்கும் போராட்டங்கள்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. கடந்த சில 10 ஆண்டுகளில், தமிழ் - சிங்களர்கள் மோதல், பௌத்தர்கள் - இஸ்லாமியர்கள் மோதலால் மொழி, மத ரீதியாக பிளவுபட்டு கிடந்த இலங்கை மக்கள், தற்போது அனைத்து வேற்றுமைகளையும் தூக்கி எரிந்துவிட்டு நாட்டுக்காக வீதியில் இறங்கி இருக்கின்றனர்.

பல்வேறு துறையினர் போராட்டம்
கடந்த 2 நாட்களுக்கு முன் இலங்கை மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் இல்லை என்று கூறி அரசு மருத்துவ அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இலங்கை அரசுக்கு எதிராகவும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மார்வன் அட்டபட்டு உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஆஞ்செலோ மேத்தியூஸ் ட்வீட்
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஆஞ்செலோ மேத்தியூஸ் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், "2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று என்ன நடந்தது என்பதற்கு பொறுப்புக்கூற வேண்டும். அன்றைய தினம் இழந்த உயிர்கள் மற்றும் சிதைந்த குடும்பங்களை நீங்கள் புறக்கணிக்க முடியாது. மனிதனின் நேரத்தை விட கடவுளின் நீதி மிகவும் சக்தி வாய்ந்தது. நீங்கள் ஓடலாம் ஆனால் கடவுளின் கோபத்திலிருந்து ஒழிந்துகொள்ள முடியாது." எனக்குறிப்பிட்டு உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து பதிவிட்ட அவர், "மதம் கடந்து நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்" என்பதை வலியுறுத்தும் வகையில் படத்தை வெளியிட்டிருந்தார்.

ஏப்ரல் 21, 2019 ல் நடந்தது என்ன?
இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று ஏராளாமான கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் குழு இருந்தபோது 3 முக்கிய தேவாலயங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்தன. அதே தினத்தில் 3 ஆடம்பர உணவகங்களிலும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த பயங்கரவாத தாக்குதலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 264 உயிர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டன.












Click it and Unblock the Notifications