15 ஆண்டுகள் பழைய பகை.. விருத்தாசலத்தில் விஸ்வரூபம் எடுக்கும் தேமுதிக vs பாமக மோதல்.. காரணம் இதுதான்
கடலூர்: விருத்தாசலம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமகவின் ஜே கார்த்திகேயன் மற்றும் அமமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் இடையே மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு என எல்லாவற்றையும் முடித்துவிட்டு அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பரப்புரையைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் பங்குனித்திருவிழா - பக்தர்கள் தரிசனம்
தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று தேமுதிக வெளிப்படையாகவே அழைப்புவிடுத்தது. இருப்பினும், தேர்தல் அறிவிப்பு வரையிலும் அதிமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவில்லை. அதன் பின்னர், பாமக மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டது.
கூட்டணி பேச்சுவார்த்தை
இருந்தாலும், தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை. அதிமுகவிடம் முதலில் 41 சீட்களை கேட்டுள்ளது தேமுதிக. ஆனால், அவ்வளவு சீட்களுக்கு வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்துவிட்டது அதிமுக. இதையடுத்து 25 இடங்களுக்கு தேமுதிக இறங்கி வந்தது. ஆனாலும், அதிகபட்சமாக 15 சட்டசபை + 1 ராஜ்ய சபா சீட் தான் என அதிமுக திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
அதிமுக கூட்டணியில் வாய்ப்பில்லை
இதனால் அதிருப்தியடைந்த தேமுதிக குறைந்தபட்சம் 23 சட்டசபை + 1 ராஜ்ய சபா இடங்கள் வேண்டும் என்று அதிமுகவிடம் வலியுறுத்தியது. அதற்கும் முடியாது என்று சொல்லிவிடவே தான், டென்ஷனான தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து விலகி அமமுக கூட்டணியில் இணைந்தது. இவ்வளவு காலம் என்னதான் ஒரே கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும், பாமகவுக்கும் தேமுதிகவும் இடையே ஏழாம் பொருத்தம்தான். இதனாலேயே பாமகவுக்கு இணையாக 23 தொகுதிகள் வேண்டும் என வலியுறுத்தியது தேமுதிக.
அமமுக பக்கம் சென்ற தேமுதிக
அதுவும் கிடைக்காததாலேயே, தேமுதிக கூட்டணியை விட்டே வெளியேறியது. டிடிவி தினகரனின் அமமுக கூட்டணியில் 60 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை. அதேநேரம் அவரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் விருதாச்சாலம் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
தேமுதிக வரலாற்றில் விருதாச்சாலம்
விருதாச்சாலம் தொகுதி தேமுதிக வரலாற்றில் முக்கியமான தொகுதியாகும். கடந்த 2006ஆம் ஆண்டு தேமுதிக முதல் முறையாகச் சட்டசபை தேர்தலில் களமிறங்கியது. தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக சுமார் 9 சதவீத வாக்குகளைப் பெற்றது. விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் பாமக வேட்பாளர் கோவிந்தசாமியை தோற்கடித்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
பாமகவுடன் மோதல்
விருத்தாசலம் மட்டுமின்றி பல தொகுதிகளிலும் பாமகவின் வாக்குகள் கணிசமாக தேமுதிக பக்கம் சென்றது. இதனால் பல தொகுதிகளில் பாமக வெற்றி வாய்ப்பை இழந்தது. அப்போது முதலே தேமுதிகவுக்கும் பாமகவுக்கும் இடையே ஏழாம் பொருத்தம்தான். இப்போது விருத்தாசலம் தொகுதிக்கு வருவோம். 2011ஆம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் தொகுதி மாறி ரிஷிவந்தியத்தில் போட்டியிட, அப்போது விருத்தாசலத்தில் தேமுதிகவின் முத்துக்குமார் வெற்றிபெற்றார். 2016இல் இந்தத் தொகுதி மீண்டும் அதிமுகவுக்கு சென்றது. இதில் பாமக சுமார் 30 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது,
பாமக உத்வேகம்
இந்த முறை அதிமுகவுடன் கூட்டணியும் அமைத்துள்ளதால் விருத்தாசலம் தொகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது பாமக. அக்கட்சியின் ஜே கார்த்திகேயன் என்பவர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன் தேமுதிகவிடம் இழந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றியே தீர வேண்டும் என்ற முனைப்பில் பாமக விருத்தாசலத்தில் இறங்கி வேலை செய்கிறது.
கவுரவ பிரச்சினை
அதேநேரம் தேமுதிகவிற்கு இது கவுரவ பிரச்சினை. அக்கட்சியின் பொதுச்செயலாளரே போட்டியிடுகிறார். இதனால் 2006ஆம் ஆண்டு நடந்த மெஜிக்கை மீண்டும் நிகழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் பிரேமலதா உள்ளார். இதற்காகக் கடந்த வாரம் அவர் விருத்தாசலம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது பேசிய பிரேமலதா, கடந்த 16 ஆண்டுகளாகக் கட்சியினருக்காக தேர்தல் பிரசாரம் செய்த நான் தற்போது முதல் முறையாகப் போட்டியிடுகிறேன். காலம் குறைவாக இருப்பதால் விருத்தாசலம் தொகுதியில் மட்டும் பிரசாரத்தில் ஈடுபடுவேன். பிற பகுதிகளில் நான் பிரசாரத்தில் ஈடுபட வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் காணவில்லை
இதிலிருந்து தெரிகிறது தேமுதிக எவ்வளவு சீரியஸாக விருச்சாலம் தொகுதியில் கவனம் செலுத்துகிறது என்று! திமுக கூட்டணி விருத்தாசலம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராதாகிருஷ்ணன் எதிராக ஏற்கனவே உள்கட்சி பூசல் தொடங்கிவிட்டது. இதனால் விருத்தாசலம் தொகுதியில் காங்கிரஸ் முக்கிய போட்டியாளராகவே இல்லை.
15 ஆண்டு பழைய பகை
அதேநேரம், தேமுதிகவும் பாமகவும் உச்சக்கட்ட மோதல் நிலவுகிறது. 15 ஆண்டுகளுக்கு முன் பகை எங்குத் தோன்றியதோ, அதே தொகுதியில் அதே இரு கட்சிகளே நேரடியாகக் களமிறங்குகின்றன. இரு கட்சிகளுக்கும் இது ஒரு கவுரவ பிரச்சினை என்பதால் விருத்தாசலத்தில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது.