விமல்ராஜ் குடும்பத்திற்கு ஆர்கே.சுரேஷ் 10 லட்சம் நிதி உதவி.. “படத்தில் இதே சீன்”- கண் கலங்கி பேச்சு!
கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஆடுகளத்திலேயே உயிரிழந்த கபடி வீரர் விமல்ராஜ் குடும்பத்திற்கு நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் ஆறுதல் தெரிவித்து 10 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடைபெற்ற கபடி போட்டியின்போது, எதிர்பாரா விதமாக ஆட்டக் களத்திலேயே உயிர்நீத்தார் கபடி வீரர் விமல்ராஜ்.
கபடி வீரர் விமல்ராஜ் வீட்டுக்கு நேரில் சென்ற நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கியுள்ளார்.
மேலும், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்திக்கும் போது இதுதொடர்பாக பேசுவதாகவும், பாஜகவைச் சேர்ந்த ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கபடி போட்டி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மானடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கபடி குழு சார்பில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி மாவட்ட அளவிலான கபடி போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 63 அணிகள் பங்கேற்றன. ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் கீழக்குப்பம் மற்றும் பெரியபுறங்கணி அணிகள் மோதின. இதில் பெரியபுறங்கணி அணியைச் சேர்ந்த விமல்ராஜ் ரெய்டு சென்றபோது அவரை எதிர் அணியினர் பிடிக்க முயன்றனர்.

மயங்கிய வீரர்
அவர்களிடம் பிடிபடாமல் இருக்க விமல்ராஜ் துள்ளிக் குதித்து தாவினார். அப்போது கீழே விழுந்த விமல்ராஜை எதிர் அணியைச் சேர்ந்த ஒருவர் மடக்கிப் பிடித்தார். அந்த நபரின் கால் விமல்ராஜின் மார்பு மற்றும் தொண்டை பகுதியில் இருந்தது. அப்போது எழுந்திருக்க முடியாமல் சிரமப்பட்ட விமல்ராஜ் திடீரென மயங்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் விமல்ராஜை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விமல்ராஜ் பலி
அங்கு விமல்ராஜை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் விமல்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கபடி விளையாடும் களத்திலேயே வீரர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த விமல்ராஜுக்கு தாய், கண்பார்வையற்ற தந்தை மற்றும் ஒரு தங்கை ஆகியோர் உள்ளனர். குடும்பத்தின் வாழ்வாதாரமே விமல்ராஜை நம்பி இருந்த நிலையில் அவர் களத்திலேயே உயிரிழந்துவிட்டதால், வாழ்வாதாரம் இழந்து நிர்க்கதியாக நிற்கும் அவரின் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அரசு நிதி உதவி
விமல்ராஜின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனை விமல்ராஜின் குடும்பத்தினரிடம் திமுக அமைச்சர்கள் மெய்யநாதன், சி.வி.கணேசன், நெய்வேலி எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று வழங்கினர். விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தனது சொந்த நிதியாக ரூ.2 லட்சத்தையும் வழங்கினார்.

ஆர்.கே.சுரேஷ் உதவி
இந்நிலையில் உயிரிழந்த கபடி வீரர் விமல்ராஜின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு நிதி உதவியாக ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, விமல்ராஜ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

விமல்ராஜை கௌரவிக்க நடவடிக்கை
பின்னர் பேட்டியளித்த நடிகர் ஆர்.கே.சுரேஷ், "நான் நடித்து வெளிவரவுள்ள திரைப்படத்தில் வரும் காட்சியைப் போன்றே விமல்ராஜ் உயிரிழந்துள்ளார். நாடே ஒரு சிறந்த விளையாட்டு வீரரை இழந்துள்ளது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்திக்கும்போது இதுதொடர்பாக பேசுவேன். மதுரையில் நடைபெறும் கபடி போட்டியில் விமல்ராஜை கௌரவிக்கும் விதத்தில் நடவடிக்கை மேற்கொள்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications