"ராட்சத முதலை.." கொள்ளிடத்தில் இளைஞரை இழுத்த சென்ற பரிதாபம்! மிரண்டுபோன கிராமம்! நடந்தது என்ன
கடலூர்: சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர், திடீரென ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பகுதியில் கொள்ளிடம் ஆறு பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றின் கரையோரத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இதற்கிடையே வடக்கு வேளக்குடி என்ற கிராமத்தில் நேற்று கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் திடீரென ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளிடம்
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அடுத்துள்ள வடக்கு வேளக்குடி கிராமத்தைச் சேர்ந்த பக்கிரி என்பவரின் மகன் திருமலை. 18 வயதான இவர், சிதம்பரம் அரசு ஐடிஐயில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை இவர் தனது நண்பர்களான அதே ஊரைச் சேர்ந்த விஷ்ணு, பழனி ஆகியோருடன் இணைந்து வேளக்குடி கிராமத்தை அடுத்துள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
இளைஞர்
அவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென ஆற்றில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதறிய அவர்கள் உடனடியாக கரைக்கு வந்துவிட்டனர். இருப்பினும், அவர்களின் சோப்பு கரையோரத்தில் விழுந்துள்ளது. இதன் காரணமாகச் சோப்பை எடுக்கத் திருமலை மீண்டும் ஆற்றின் அருகே சென்றுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, ஆற்றிலிருந்த முதலை திருமலையைக் கவ்வியுள்ளது. திருமலையில் காலை பிடித்த அந்த முதலை, அவரை அப்படியே ஆற்றில் இழுத்துச் சென்றுள்ளது.
முதலை
இந்த ராட்சத முதலை திருமலையை நீரில் இழுத்துச் சென்றதைப் பார்த்து அவருடன் குளித்தவர்களும் அங்கிருந்தவர்களும் மிரண்டுவிட்டனர். இதையடுத்து முதலை இழுத்துச் சென்ற திருமலையை அக்கம் பக்கத்தினர் தேட தொடங்கினர். இதற்கிடையே கொள்ளிடம் ஆற்றில் முதலை இழுத்துச் செல்லும் வீடியோவும் கூட இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், அவர்களால் திருமலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
சடலம்
இதையடுத்து அவர்கள் போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிதம்பரம் வனத்துறையினர் பழைய கொள்ளிடம் பகுதியில் மாயமான திருமலையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் அவரை வனத்துறையினர் தீவிரமாகத் தேடிய நிலையில், அங்குள்ள புதர் ஒன்றில் திருமலை உடலை மீட்டனர். இதையடுத்து திருமலையின் உடலை மீட்ட அவர்கள், சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிகம்
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன், காவல் உதவி கண்காணிப்பாளர் ரகுபதி, வட்டாட்சியர் ஹரிதாஸ் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் நடந்துள்ள வேளக்குடி கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள முதலைகள் அடிக்கடி ஆற்றின் அருகே இருக்கும் ஆடு, மாடுகளைக் கடித்து இழுத்துச் சென்றுவிடுவதாகக் கூறப்படுகிறது.