பஸ் ஸ்டாப்பில் மாணவிக்கு மஞ்சள் கயிறு கட்டிய மாணவன் விவகாரம்..சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பஸ் ஸ்டாப்பில் வைத்து பள்ளி மாணவிக்கு மஞ்சள் கயிறை சக மாணவன் கட்டிய வீடியோ ஒன்று கடந்த அக்டோபர் மாதம் சமூக வலைத்தளங்களில் பரவி பெற்றோர்களை பதற வைத்தது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பேருந்து நிலையத்தின் அருகில் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு செல்லும் மினி பேருந்துகளுக்கான பேருந்து நிறுத்தம் உள்ளது.
இந்த பேருந்து நிறுத்த நிழற்குறை ஒன்றில் பள்ளிக்கூட சீருடையில் இருக்கும் மாணவிக்கு சக மாணவன் ஒருவர் மஞ்சள் கயிறு தாலி கட்டுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பெற்றோர்களை பதை பதைக்க வைத்திருந்தது.

மாணவியின் தந்தை மனு
உடனடியாக இந்த வீடியோ காட்சிகள் தொடர்பாக விசாரணையை தொடங்கிய போலீசார் மாணவனிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர். பள்ளி மாணவியை மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

விரிவான உத்தரவுகளை பிறப்பிக்க
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் , மாணவனை கைது செய்தத்து தொடர்பாக விரிவான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டியிருப்பதாக கூறி வழக்கை விரிவாக விசாரிக்க முடிவு செய்தது. அந்த அடிப்படையில் இந்த வழக்கு நீதிபதி பிஎன்.பிரகாஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மீண்டும் விசாரணை
அப்போது மாணவனை கைது செய்த போலீசாரின் செயலுக்கும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மாணவியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்ததற்கும் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து பிறப்பித்த உத்தரவில் மாணவியும் மாணவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். மேலும், போக்சோ, சிறார் குற்றங்களை கையாள்வது தொடர்பாக புதிய விதிகளை வகுக்கவும் ஆலோசனை வழங்கியிருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது

காவல்துறையினர் கையாள்வது குறித்து
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் பதிவு செய்த வழக்கின் விசாரணையை சிறார் நீதிக்குழுமத்திற்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள் போக்சோ மற்றும் சிறார் குற்றங்களை காவல்துறையினர் கையாள்வது குறித்து அவ்வப்போது உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருப்பதால் இந்த வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்றியும் சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து இருந்தனர். இந்த சிறப்பு அமர்வில் தற்போது இந்த நீதிபதியுடன் அமர்ந்து இருக்கக் கூடிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அந்த அமர்வில் இடம் பெற வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications