தொடர் கனமழை.. தமிழகத்தில் தட்டச்சு தேர்வுகள் ஒத்திவைப்பு.. அண்ணாமலை பல்கலைக்கழக பரீட்சை தள்ளிவைப்பு
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருந்த தட்டச்சு தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தாமதமாக துவங்கினாலும் தற்போது வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையே தான் வங்கக்கடலில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோர பகுதிகளையொட்டி நிலவுகிறது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நாளைக்குள் நகரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

வெளுத்து வாங்கும் கனமழை
இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் நாளை மறுதினம் வரை பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முதலே சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை நாளை மறுநாள் வரை 3 நாட்கள் வரை நீடிக்கும் என கூறப்படுகிறது. இன்று காலை முதல் சென்னை உள்பட மேலும் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் 23 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்துக்கு விடுமுறை
இந்நிலையில் தான் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை பெய்ய துவங்கியது. இன்று அதிகாலை முதல் மாவட்டத்தின் பல இடங்களில் பரலவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக கடலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

தேர்வுகள் தள்ளிவைப்பு
இது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கும் பொருந்தும். இதனால் இன்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது பல்கலைக்கழகத்தில் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் இன்றைய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும், தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு செய்துள்ளார்.

தட்டச்சு தேர்வுக்கு மாற்று தேதி
மேலும் தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக தட்டச்சு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை, நாளை மறுநாள் நடைபெற இருந்த தட்டச்சு தேர்வுகள் மாற்று தேதியில் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வுகள் நவம்பர் 19, 20ம் தேதிகளில் நடத்தப்படும் என தட்டச்சு தேர்வு வாரியம் அறிவிப்பு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications