10 நாளாக கடலுக்கு போகலை! அப்பறம் 100 பெட்டிகளில் மீன்கள் எப்படி? ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு ஷாக்!
கடலூர்: கடலூரில் 10 நாட்களாக கடலுக்குள் போகாத நிலையில் 100 பெட்டிகளில் மீன் விற்பனை மட்டும் எப்படி என சந்தேகமடைந்து ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கடந்த 23 ஆம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கு முன்பே வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.

இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிலையில்தான் பெஞ்சல் புயல் கடந்த 27ஆம் தேதியே உருவாகும் என சொல்லப்பட்டு பிறகு போக்கு காட்டியது.
இதனால் ஆழ்ந்த காற்றழுத்தமாகவே சென்னை டூ புதுவை இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் திடீர் ட்விஸ்ட்டாக நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு பெஞ்சல் என்ற பெயரிடப்பட்டது.
இதை சவுதி அரேபியா பரிந்துரைத்திருந்தது. இந்த புயல் காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயலின் போது அதிக மழை பெய்யும் என்பதால் யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள சில்வர் கடற்கரைத, தேவனாம்பட்டினம் கடற்கரை உள்ளிட்டவை கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. கடந்த 10 நாட்களாக அவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை என்பதால் அவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழக அரசு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
10 நாட்களாக கடலுக்குள் செல்லவில்லை என கூறப்படும் நிலையில் மீன் வியாபாரம் அமோமாக நடப்பதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸார் உதவியுடன் விரைந்த அதிகாரிகள் அங்கிருந்த மீன்களை ஆய்வு செய்தனர்.
அப்போது அவை கெட்டு போய் இருந்தது தெரியவந்தது. மேலும் ஐஸ் கட்டியின் நிறமே மாறியிருந்தது. ஆனால் மீன் கடைக்காரர்களோ அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். ஐஸ் கட்டி அந்த கலரில்தான் இருக்கும் என தெரிவித்தனர்.
100 பெட்டிகளில் மீன்கள் இருந்த நிலையில் அவற்றை ஆய்வு செய்த அதிகாரிகள் அவற்றை அழிப்பதற்காக ஒரு பையில் கொட்டி எடுத்துச் சென்றனர். சில மீன்கள் பார்மலின் போட்டும் பதப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றையும் அதிகாரிகள் அழிப்பதற்காக அள்ளிச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications