உச்சமடையும் போர்! உக்ரைனில் இருந்து முதற்கட்டமாகத் தாயகம் திரும்பும் 17 தமிழக மாணவர்கள்! முழு தகவல்
டெல்லி: உக்ரைன் நாட்டில் இருந்து அண்டை நாடுகள் வழியாகத் தமிழக மாணவர்கள் அழைத்து வரப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் நாட்டில் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நீட்டித்து வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி உக்ரைன் மீது இப்போது ரஷ்யா முழுவ வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கி உள்ளது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த போர் 3ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.
பேச்சுவார்த்தைக்கு வர மறுப்பு- உக்ரைன் மீதான தாக்குதல் தொடரும் என ரஷ்யா அறிவிப்பு
உக்ரைன் போர்
இந்தப் போர் காரணமாக உக்ரைன் நாட்டின் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இதனிடையே அங்குச் சிக்கி உள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை வேறு வழிகளில் மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. உக்ரைன் நாட்டை சுற்றி உள்ள அண்டை நாடுகளின் உதவியுடன் அங்குள்ள இந்திய மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு
ஏற்கனவே, உக்ரைன் கல்லூரிகளில் படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட இந்திய மாணவர்கள் சாலை வழியாக ருமேனியா நாட்டிற்கு வரத் தொடங்கி உள்ளனர்.இவர்களுக்காகவே அப்பகுதிகளில் ரஷ்யா மொழி பேசும் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அப்படி சாலை மார்கமாக ருமேனியா மற்றும் ஹங்கேரி வரும் தமிழக மாணவர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம தாயகம் அழைத்து வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
17 தமிழக மாணவர்கள்
இதனிடையே அண்டை நாடுகள் வழியாக உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேறிய 17 தமிழக மாணவர்கள் முதற்கட்டமாகத் தாயகம் திரும்ப உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் ருமேனியா மற்றும் ஹங்கேரி நாடுகளில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட உள்ளனர். இதற்காக ஏற்கனவே AI 1943, AI 1941 என இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் வெள்ளிக்கிழமை ருமேனியா மற்றும் ஹங்கேரி புறப்பட்டுச் சென்றுவிட்டது.
யார் யார்
ருமேனி வந்த 12 தமிழர்கள் உட்பட இந்தியர்கள் இன்று இரவு மும்பைக்கும் ஹங்கேரி வந்த 5 தமிழர்கள் நாளை அதிகாலை டெல்லி அழைத்து வரப்படுகின்றனர். சாந்தனு, செல்வபிரியா, ஹரிஹரசுதாகர், வைஷ்ணவிதேவி உள்ளிட்ட 17 மாணவர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். டெல்லி, மற்றும் மும்பை வந்ததும், அங்கிருந்து உடனடியாக சென்னை அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செலவை ஏற்கும் தமிழக அரசு
அதேபோல நாளை மறுநாள் மேலும் சில தமிழக மாணவர்கள் தாயகம் திரும்ப உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனில் உள்ள மாணவர்கள் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்குள்ள பெற்றோர்கள் பலரும் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த செய்தி நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. முன்னதாக தமிழக மாணவர்கள் உக்ரைனில் இருந்து திரும்ப ஆகும் செலவை அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.