இந்தியாவில் புதிய வகை கொரோனா? கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரி ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு
டெல்லி: பிரிட்டனிலிருந்து திரும்பியவர்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்திற்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் வகை தன்னை தானே உருமாற்றிய புதிய வகை கொரோனாவை கண்டறிந்தனர்.
மேலும், இந்தப் புதிய வகை, மற்ற கொரோனா வைரஸ்களைவிட 70% வேகமாகப் பரவுவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர். ஏற்கனவே, இந்தப் புதிய வகை கொரோனா நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.
பிரிட்டன் விமானங்களுக்குத் தடை
இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்குக் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட மற்ற பகுதிகளிலிருந்து வரும் நபர்களுக்கும் ஆர்.டி.- பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
22 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்
கடந்த சில நாட்களாக பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்களில் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒருவர், பஞ்சாபில் ஏழு பயணிகள் ஒரு விமான ஊழியர் என எட்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல கொல்கத்தாவில் இருவருக்கும் டெல்லியில் ஆறு பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சோதனைகளுக்கு மாதிரிகள் அனுப்பி வைப்பு
இந்தியாவில் இதுவரை யாருக்கும் புதிய வகை கொரோனா உறுதி செய்யப்படவில்லை என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்ட பயணிகளின் ரத்த மாதிரிகளும் புனேவிலுள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்திற்குச் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வாய்ப்புகள் அதிகம்
இருப்பினும், மற்ற நாடுகளுடனான விமான போக்குவரத்து இன்னும் உள்ளதால் இந்தியாவிற்குள் இந்த புதிய வகை கொரோனா நுழைய வாய்ப்புகள் மிக அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கடந்த இரண்டு வாரங்களாக வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் குறித்த தகவல்களை அரசு சேகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், பிரிட்டனிலிருந்து திரும்பியவர்கள் குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பயணிகள் புகார்
புதிய வகை கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் இருக்கும் விமான நிலையங்களில் பல புதிய கட்டுப்பாடுகளை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்புகள் காரணமாக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாகவும் இவை குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23,950 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை நாடு முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.01 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதலே கொரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.