100 ரூபாய் இருக்குமா சார்.. தவித்த மக்கள்.. பணமதிப்பிழப்பு.. மறக்க முடியாத 'நவம்பர் 8'
டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையை 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இதே நாளில் தான் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன்படி 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒரே நாள் இரவில் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இதே வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி முன்பு திடீரென தோன்றினார். அப்போது அவர், நாளை முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ரொக்கமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வைத்துள்ளவர்கள் உடனே வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும்.
மக்களுக்கு வேண்டுகோள்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கணக்கில் வராமல் கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் சிக்குவார்கள் என்றும் தெரிவித்தார். சில மாதங்கள் மக்கள் இந்த நடவடிக்கையை பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று அப்போது அவர் வேண்டுகோள் விடுத்தார்.
வங்கிகளுக்கு விடுமுறை
பணமதிப்பிழப்பு நடவடிக்கை செவ்வாய்கிழமை இரவு அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த இரண்டு நாட்கள் வங்கிகள் இயங்காது என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். அதன்பிறகு வங்கிகள் திறக்கப்பட்ட பிறகு கையில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறினார்.
100 ரூபாய்க்காக
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த மக்கள், அனைவரும் 100 ரூபாய் நோட்டுக்கள் எந்த ஏடிஎம்களில் உள்ளது என்று தெருத்தெருவாக தேடி அலைந்தனர். ஒரு சில ஏடிஎம்களில் மட்டுமே 100 ரூபாய் நோட்டுகள் இருந்தன. கிடைத்த நோட்டுகளை எடுத்துவிட்டு அப்பாடா.. நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
அரசு கட்டுப்பாடு
அதன் பிறகு வங்கிகள் திறக்கப்பட்ட பிறகு புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. 500 மற்றும் 1000 நோட்டுகளை டெபாசிட் செய்ய சொன்ன மத்திய அரசு, பணத்தை மொத்தமாக எடுப்பதற்கு அனுமதிக்கவில்லை.
மக்கள் அவதி
முதலில் 2000, அதன்பிறகு 4000 ஆயிரம்,, என படிப்படியாக பணத்தை எடுப்பதற்கு தடையை மத்திய அரசு விலக்கியது. ஆனால் அதேநேரம் பணத்தை டெபாசிட் செய்த மக்களுக்கு 2000 ரூபாய் நோட்டுகளையே கொடுத்தது. அந்த நோட்டை மக்கள் மாற்ற முடியாமல் மிகவும் அவதி அடைந்தனர். ஆதார் கார்டு ஜெராக்ஸ் வாங்கித்தான் 2000 ரூபாய் நோட்டுகளை அரசு மக்களுக்கு அளித்தது.
ரூ.500 நோட்டு அறிமுகம்
இதன்பிறகு அடுத்த 6 மாத காலத்திற்கு மக்கள் வங்கி ஏடிஎம்களில் எப்போது பணம் இருக்கும் என்று தேடித்தேடி நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்தார்கள். இதற்கு இடையில் ரூ.500 நோட்டுகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் நிலைமை ஓரளவு சீரடைந்தது. ஆனாலும் இந்த பிரச்சனை தீர்வு என்பது 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்ட காலத்திற்கு பின்னரே முடிவுக்கு வந்தது. கிட்டதட்ட ஓராண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் இந்தியாவில் இருந்தது.
சிறுகுறு வர்த்தகம்
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு குறு வர்த்தகம் செய்தவர்கள், சிறிய வியாபாரிகள், சில்லறை மாற்ற முடியாமல், பணத்தை வியாபாரத்திற்கு புரட்ட முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். ஏனெனில் அப்போது அவரை அவர்கள் யாரிடமும் ஸ்வைப்பிங் மிசின் பயன்பாடு என்பது இல்லாமல் இருந்தது.அதன்பிறகே வாங்கினார்கள்.
எதிர்க்கட்சிகள்
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் உள்பட எதிர்க்கட்சியினர் விமர்சித்தார்கள். அதேநேரம் பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் அரசின் நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழியும் என்று வெகுவாக பாராட்டவும் செய்தனர்.