ஆங்கிலத்தில் 35 மார்க், கணிதத்தில் வெறும் 36.. குஜராத் ஐஏஎஸ் அதிகாரியின் 10இல் பெற்ற மார்க் தான் இது
டெல்லி: மாணவர்கள் அனைவரும் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளுக்குக் காத்திருக்கும் சூழலில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் பள்ளி மார்க் ஷீட் படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
இந்தியாவிலேயே மிகவும் கடினமான போட்டித் தேர்வாக யுபிஎஸ்சி எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகள் கருதப்படுகிறது. அதை கிளியர் செய்ய பலரும் பல ஆண்டுகள் முயல்கின்றனர்.
இரவு பகல் பாராமல் படித்தும் கூட அனைவராலும் யுபிஎஸ்சி தேர்வுகளில் எளிதாக தேர்ச்சி பெற முடியாது. அந்தளவுக்கு யுபிஎஸ்சி தேர்வுகள் கடினமான தேர்வாகக் கருதப்படுகிறது.
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்.. உ..பி.யை சேர்ந்த ஸ்ருதி சர்மா முதலிடம்!.. டாப் 4 இல் பெண்கள் சாதனை!
குஜராத் கலெக்டர்
இந்தச் சூழலில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கலெக்டர் ஒருவரின் 10ஆம் வகுப்பு மார்க் ஷீட் படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது. இன்னும் சில நாட்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மதிப்பெண்கள் குறைவதால், சில மாணவர்கள் மோசமான முடிவுகளை எடுக்கிறார்கள். அதுபோன்ற மாணவர்களுக்கு இந்த ஒரு மதிப்பெண் நமது வாழ்க்கையைத் தீர்மானிப்பது இல்லை என்பதை உணர்த்தும் வகையில் ஐஏஎஸ் அதிகாரியின் 10ஆம் வகுப்பு மார்க் ஷீட் படங்கள் பகிரப்பட்டு உள்ளது.
10ஆம் வகுப்பு
குஜராத் மாநிலம் பருச் மாவட்ட ஆட்சியராக உள்ளவர் துஷார் டி சுமேரா. இவர் தான் தனது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளைப் பகிர்ந்துள்ளார். 10ஆம் வகுப்பில் இவர் வெறும் பாஸ் மார்க் மட்டுமே பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் 35 மதிப்பெண்களும், கணிதத்தில் 36 மதிப்பெண்களும் மட்டுமே பெற்றுள்ளார். இந்த படத்தை சத்தீஸ்கர் கேடரை சேர்ந்த மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் ஷரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மார்க்
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பரூச் கலெக்டர் துஷார் சுமேரா தனது மார்க் ஷீட்டை பகிர்ந்து 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பாஸ் மார்க் மட்டுமே தெரிவித்துள்ளார். 100க்கு ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36 மார்க் எடுத்துள்ளார். அவரது கிராமம் முழுவதும் மட்டுமின்றி பள்ளியிலும் கூட அவரால் எதுவும் சாதிக்க முடியாது என்றே கூறினார்கள்" என்று பதிவிட்டு உள்ளார். இதற்கு துஷார் டி சுமேரா நன்றி தெரிவித்து, பதில் அளித்துள்ளார்.
யார் இவர்
துஷார் சுமேரா 2012இல் ஐஏஎஸ் அதிகாரியானார். அவர் கலைப் பிரிவில் பட்டப்படிப்பை முடித்து இருந்தார். யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன்பு, அவர் சில ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். 10ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு துஷார் சுமேரா வாழ்க்கை ஒரு முன்மாதிரி. ஒரு தேர்வின் மதிப்பெண் மட்டும் நமது வாழ்க்கையைத் தீர்மானித்து விடாது.
சாதிக்கலாம்
விடா முயற்சி உடன் தொடர்ந்து கடினமாக உழைத்தால் எந்தவொரு உயரத்தையும் எளிதாக எட்டிவிடலாம். இந்த ட்வீட்டை இணையத்தில் பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து வருகின்றனர். பலரும் இதை உத்வேகம் அளிக்கும் செய்தியாகவே பார்த்து வருகின்றனர். இருப்பினும், சிலரோ இதற்கு எதிர்மறை கருத்துகளும் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இதுபோன்ற நெகடிவ் கருத்துகளைப் புறம் தள்ளி தீவிர முயற்சி எடுத்தால் எந்தவொரு உயரத்தையும் எளிதாகவே அடையலாம்.