நாடு முழுவதும் முதல் நாளில் 40 லட்சம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி- கேரளாவில் அதிகம்!
டெல்லி: நாடு முழுவதும் முதல் நாளில் 15-18 வயதுக்குட்பட்ட 40 லட்சம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Recommended Video

உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவல் அதி உச்சமாக இருந்து வருகிறது. ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் டெல்டா வகை வைரஸைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
உலக நாடுகளில் கொரோனா 4-வது அலை சுனாமி போல தாக்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா 3-வது அலை தொடங்கி பரவி வருகிறது.

சிறுவர்களுக்கு தடுப்பூசி
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் நாட்டில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனடிப்படையில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.

முதல் நாளில் 40 லட்சம் சிறுவர்கள்
2007-ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னதாக பிறந்தவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கோவின் தளம், சுகாதார மையங்களில் பதிவு செய்யலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. நேற்று காலை முதல் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. சுகாதார மையங்கள், பள்ளிக்கூடங்களில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன. நேற்று முதல் நாளில் மட்டும் இரவு 8 மணி வரை மொத்தம் 40 லட்சம் சிறுவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கேரளாவில் அதிகம்
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக நேற்று பிற்பகல் வரை 39.88 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். டெல்லியில் நேற்று மாலை 6 மணிவரை 20998 சிறுவர்கள் தடுப்பூசி போட்டிருந்தனர். வடகிழக்கு டெல்லியில்தான் அதிகபட்சமாக 3,687 சிறுவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மத்திய டெல்லியில் மிக குறைந்த அளவாக 739 சிறுவர்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பஞ்சாப் மாநிலத்தில் 3071, சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் 1826 சிறுவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கேரளாவில் மொத்தம் 38,417 சிறுவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். திருவனந்தபுரத்தில் அதிகபட்சமாக 9,338 சிறுவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

மத்திய அமைச்சர் பாராட்டு
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தமது ட்விட்டர் பக்கத்தில், வெல்டன் யங் இந்தியா! முதல் நாளில் 15-18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 40 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என பாராட்டுத் தெரிவித்துள்ளார். முன்னதாக ஞாயிற்றுக்கிழமையன்று மாநில சுகாதார அமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மன்சுக் மாண்டவியா சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.












Click it and Unblock the Notifications