ஃபோர்டு உட்பட.. இந்தியாவை விட்டு கிளம்பிய 5 பெரும் வாகன நிறுவனங்கள்.. 64,000 பேருக்கு வேலை இழப்பு
டெல்லி: சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து ஐந்து பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் வெளியேறியுள்ளனர். இதனால், டீலர் ஷோரூம்களில் மொத்தம் 64,000 வேலைவாய்ப்பு இழக்கப்பட்டு, ரூ.2,485 கோடி முதலீடு பறிபோயுள்ளது என்று கலங்கடிக்கும் புள்ளி விவரம் ஒன்று சுட்டிக் காட்டுகிறது.
Recommended Video
2017 முதல் இதுவரை 5 பெரிய கார் நிறுவனங்கள், பெரும்பாலும் அமெரிக்க வாகன உற்பத்தியாளர்கள், மோசமான விற்பனை நிலவரத்தை காரணம் காட்டி இந்திய சந்தையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அதில் சமீபத்தில் போர்டு வாகன உற்பத்தி ஆலையும் ஒன்று.

அமெரிக்க நிறுவனம் ஃபோர்டு
அமெரிக்காவின் மிச்சிகனை தலைமையிடமாக கொண்ட ஃபோர்ட் நிறுவனம், இந்தியாவில் கடந்த மாதம் அதன் இரண்டு உற்பத்தி ஆலைகளை மூடுவதாகவும் அதன் பயணிகள் வாகனங்களின் விற்பனையை நிறுத்துவதாகவும் அறிவித்தது.

மோசமான வேலை பறிப்பு
ஆட்டோமொபைல் டீலர் அசோசியேஷன், ஃபாடா (FADA) வின் டேட்டாப்படி, ஃபோர்டு மட்டும் 40,000 வேலை இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் 170 டீலர்கள் 2,000 கோடி ரூபாயை இழப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்டு இந்தியாவால் நேரடியாகப் பணியமர்த்தப்பட்ட 4,000 ஊழியர்கள் நிலைமை தனி விஷயம். இது டீலர்கள் மட்டத்தில் நடக்கும் வேலை இழப்பு விஷயமாகும்.

தொழில்முனைவோருக்கு ஆர்வம் போய்விடும்
"இந்த MNC களின் திடீர் வெளியேற்றங்கள் ஒட்டுமொத்த ஆட்டோ சில்லறை வணிகத்திற்கும் பெரும் உளைச்சலை ஏற்படுத்துகின்றன, மேலும் வியாபாரம் செய்வதில் தொழில்முனைவோரின் ஆர்வம் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன்களுக்கு இடையூறு விளைவிக்கிறது. இது சமூகத்தில் டீலர்களின் பெயரை கெடுப்பது மட்டுமல்லாமல், டீலர்கள் பிராண்டின் முகமாக இருப்பதால், இந்தியாவின் மதிப்பை கெடுக்கிறது, "என்று ஃபாடா தலைவர் விங்கேஷ் குலாட்டி கூறியுள்ளார்.

இழப்பு வழங்குவதாக உறுதி
ஃபோர்டு தனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை தொடர்ந்து வழங்குவதாகவும், இந்தியாவில் இறக்குமதி வழி வழியாக பிரீமியம் வாகனங்களை விற்பனை செய்வதாகவும் கூறியிருந்தது. வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை தொடர்ந்து வழங்கும் டீலர்களுக்கு போதுமான இழப்பீடு அளிக்கும் என்றும் அது கூறியிருந்தது.

டீலர்களுக்கு நெருக்கடி
உண்மையில் அப்படி இல்லை என்பதை போல, உள்ளது, கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டேவுக்கு FADA எழுதிய கடிதம். அந்த கடிதத்தில், ஃபோர்டு இந்தியா எந்தவித இழப்பீட்டுத் தொகுப்பும் தயாரிக்கப்படுவதற்கு முன்னர், 2021 செப்டம்பர் 14-ஆம் தேதிக்குள் வெளியிடப்படாத ஒப்பந்தத்தில் (NDA) கையெழுத்திடும்படி டீலர்களை கட்டாயப்படுத்துகிறது. ஆட்டோமொபைல் விற்பனையாளர்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்கான அதன் முக்கியத்துவம் குறித்த முறையான விவாதத்தைத் தொடங்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவை விட்டு வெளியேறிய நிறுவனங்கள்
ஏற்கனவே பல பெரிய நிறுவனங்கள் இப்படித்தான் வெளியேறியுள்ளன. ஜெனரல் மோட்டார்ஸ் (2017 இல்), மேன் டிரக்குகள் (2018 இல்), யுஎம் லோஹியா (2019 இல்), ஹார்லி டேவிட்சன் (2020 இல்) வெளியேறின. ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவை விட்டு வெளியேறியபோது 15,000 வேலை வாய்ப்புகள் பறிபோயின. 4,500 பேர் மேன் டிரக்குகள் போனதால் பணி இழந்தனர். 2,000 பேர் ஹார்லி டேவிட்சன் வெளியேறியபோதும் மற்றும் 2,500 பேர் யுஎம் லோஹியா இந்தியாவில் தங்கள் சில்லறை வணிகங்களை மூடியபோது வேலைகளை இழந்தோர் எண்ணிக்கையாகும்.












Click it and Unblock the Notifications