வெறும் 2 மாதம்..கொரோனாவால் பெற்றோரை இழந்து.. அனாதையான 577 குழந்தைகள்.. அமைச்சர் ஸ்மிருதி இராணி வேதனை
டெல்லி: நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மட்டும் சுமார் 577 குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதையாகியுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் 2ஆம் அலை தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. கொரோனா முதல் அலையைவிட 2ஆம் அலையில் வைரஸ் பாதிப்பின் தீவிரம் அதிகமாக உள்ளது.
மக்கள் அரசு வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிக்காததும் உருமாறிய கொரோனா வகைகளுமே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. கொரோனா 2ஆம் அலையில் குறிப்பாக உயிரிழப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர் உடலில்.. ஒரு நாளுக்கு மேல் வைரஸ் செயல்பாட்டில் இருக்காது.. எய்ம்ஸ் விளக்கம்!
பெற்றோரை இழக்கும் குழந்தைகள்
இந்தியாவில் தினசரி கொரோனா உயிரிழப்புகள் அதிகபட்சமாக 4000 வரை சென்றது. குறிப்பாக கொரோனாவால் குடும்பத்திலுள்ள தாய்-தந்தை என இருவரும் உயிரிழப்பதால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதையாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் சுமார் 577 குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதையாகியுள்ளதாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
577 குழந்தைகள்
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளைப் பாதுகாத்து ஆதரவளிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. மாநில அரசுகளின் தரவுகளின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 1 முதல் நேற்று வரை மட்டும் நாடு முழுவதும் உள்ள 577 குழந்தைகள் தங்கள் பெற்றோரை கொரோனாவால் இழந்துள்ளனர். அவர்களின் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்" என்றார்.
யுனிசெப் ஆலோசனை
பெற்றோரை இழந்த குழந்தைகள் கைவிடப்படவில்லை என்றும், மாவட்ட அதிகாரிகளின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், குழந்தைகளுக்கு ஆலோசனை தேவைப்பட்டால், தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தில் (NIMHANS) ஒரு குழு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் யுனிசெப் உட்பட அனைத்து அமைப்புகளுடன் ஆலோசனைகளையும் நடத்தி வருகிறது.
மாநில அரசுகள்
இதேபோல பல்வேறு மாநில அரசுகளும் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்புகளை தங்கள் வசம் எடுத்துக் கொண்டுள்ளன. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில அரசுகள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. புது டெல்லி அரசும் இலவச கல்வி வழங்குகிறது.
5% இட ஒதுக்கீடு
ஆந்திர அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கிக்கணக்கு துவக்கி 10 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையாகச் செலுத்தப்படும் என்றும் இந்த டெபாசிட் தொகையின் மூலமாகக் கிடைக்கும் வட்டி வருவாய் மூலம் பாதுகாவலர் அந்தக் குழந்தையை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது, உத்தரகண்ட் அரசு பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு உதவித்தொகையும் மாநில வேலைவாய்ப்பில் 5% சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.